![](admin/uploads/.5cd900a82e63b0.97457507.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநலமனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நீதிமன்றம் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்தியபின் முழு கொள்ளளவான 152 அடி நீர்தேக்கி கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கியது. அதன்பின் 2014 ஆண்டில் இருந்து 142 அடிக்குமேல் வரும் தண்ணீர் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர் வழியாக கேரளா பகுதிக்கு வீணாக திறக்கப்பட்டு வருகிறது.
தமிழக பகுதிக்கு தேக்கடி ஷட்டரில் இருந்து சுரங்கப்பாதை வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 2500 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும். இந்த தண்ணீர் லோயர் கேம்ப் மின்உற்பத்திக்கு 4 ராட்சதகுழாய் வழியாகவும், இறைச்சல் பாலம் வழியாகவும் வெளியேறும். இதைவிட கூடுதல் நீர் திறக்க வாய்ப்பில்லை. எனவே தமிழகப்பகுதிக்கு மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து இதைவிட அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டால் வீணாக கேரள பகுதிக்கு தண்ணீர் வெளியேற வேண்டிய அவசியமில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழக பகுதிக்கு மேலும் கூடுதல் தண்ணீர் திறக்க 2-வது சுரங்கப்பாதை அமைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் லோயர் கேம்பில் இருந்து ராமநாதபுரம் வரை 259 கி.மீ. தூரத்திற்கு விவசாயம், குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படாது. எனவே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டது. அவர்களின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார். அப்போது அரசு தரப்பில், சுரங்கப்பாதை அமைப்பதற்கான இடத்தில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளதால் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து பொதுப்பணித்துறை செயலர் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பான ஆய்வின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.