Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அயோத்தி நிலம் வழக்கு: ஆகஸ்ட் 15 வரை அவகாசம் அளித்தது சுப்ரீம் கோர்ட்

மே 10, 2019 06:06

புதுடெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. ஆனால் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் யு.யு.லலித், என்.வி.ரமணா ஆகியோர் அடுத்தடுத்து விலகினர்.

மற்றொரு நீதிபதி எ.ஏ.பாப்டே விடுப்பில் சென்றார். இதுபோன்ற காரணங்களால் வழக்கு விசாரணையில் கால தாமதம் ஆனது. அதன்பின்னர் புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். 
 
இதற்கிடையே, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக கடந்த மார்ச் 8 தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியபோது, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில், மூன்று பேர் கொண்ட சமரச குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்பான தகவல்கள் ரகசியமாகவே இருக்கும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சமரச குழுவில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த மூன்று பேர் கொண்ட சமரச குழு சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினரிடமும் ஆலோசனை நடத்தி, அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஸ்தம் குழுவினர், அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு கோரினர்.

இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மத்தியஸ்தம் குழுவினருக்கு ஆகஸ்டு 15-ம் தேதிவரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

தலைப்புச்செய்திகள்