![](admin/uploads/.5fdc5f1ba3a388.80967528.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல் : நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங் இரத்ததான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங் இரத்ததான விழிப்புணர்வு பேரணியை இன்று (01.10.2022) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கி பாரத ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, திருச்சி சாலை வழியாக சென்று நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் முடிவடைந்தது. இப்பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு இரத்ததான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்றனர்.
இரத்த தானம் மூலம் மதிக்கத்தக்க மனித உயிரை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ இரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தின் கருப்பொருள் "ஒற்றுமையுடன் இரத்த தானம் செய்வோம். ஓருங்கிணைந்த
முயற்சியுடன் உயிர்களைக் காப்போம்" என்பதாகும்.
ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 5 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானத்தின் போது 350 மி.லி இரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. இரத்த தானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். இரத்த தானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான அனைவரும் 3 மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம். தானமாக பெறப்படும் ஒரு அலகு இரத்தம் 3 உயிர்களை காப்பாற்றும். உரிய
கால இடைவெளியில் இரத்த தானம் செய்வதால் உடலில் புதிய செல்கள் உருவாகி அவர்களின் உடல் நலன் காக்கப்படுகிறது. அரசு இரத்ததான மையங்கள் மற்றும் தன்னார்வ இரத்த தான முகாம்களில் இரத்த தானம் செய்யலாம்.
பின்னர், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவில் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஸ்ரேயா பி.சிங் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.சாந்தா அருள்மொழி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.