Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் மீண்டும் ஒரு நரபலி செய்ய முயற்சி: சிறுவர்-சிறுமிகளை பூஜைகளுக்கு பயன்படுத்திய பெண் சாமியார் கைது

அக்டோபர் 14, 2022 04:29

பாலக்காடு, பத்தினம்திட்டா அருகே சிறுவர்-சிறுமிகளை பூஜைகளுக்கு பயன்படுத்திய பெண் சாமியார் கைது செய்யப்பட்டார். அந்த சிறுவர்-சிறுமிகளை நரபலி கொடுக்க முயன்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பத்தினம்திட்டா அருகே உள்ள மலையாளபுழா பகுதியில் வசந்தி அம்மா மடம் உள்ளது. இந்த மடத்தில் வசித்து வருபவர் ஷோபனா (வயது 52). சாமியார். இங்கு கடந்த பல வருடமாக மந்திரவாதங்கள் ஷோபனா தலைமையில் நடந்து வந்துள்ளது. இந்த மந்திரவாதம் செய்யும் போது ஷோபனாவுக்கு தெரிந்த சிறுவர்- சிறுமிகளை பயன்படுத்தி கொள்வது வழக்கம். சில நேரம் மந்திரவாதம் செய்யும் போது சிறுவர்- சிறுமிகள் மயங்கி விழ வைத்து உள்ளார். மந்திரவாதத்தில் ஈடுபடும் போது இவர் பலத்த குரல் எழுப்பி சிறுவர்களை பயமுறுத்தி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் கண்டுகொள்ளவில்லை.

இந்திநிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் நடந்த நரபலி சம்பவத்தையொட்டி கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெண் சாமியார் ஷோபனா மீது மீண்டும் பொதுமக்கள் புகார் கொடுத்தார்கள். புகாரை பெற்றுக் கொண்ட பத்தினம்திட்டா போலீஸ் அதிகாரிகள் நேற்று காலை மடத்துக்கு சென்று ஷோபனாவிடம் விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் சிறுவர்-சிறுமிகளை பூஜை செய்ய உதவியாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து ஷோபனாவை கைது செய்தனர். மேலும் மடத்தில் இருந்த சிறுவர்-சிறுமிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுதொடர்பாக பெண் சாமியாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு உள்ளார்கள். அதனால் இந்த பெண் சாமியார் ஷோபனாவும், சிறுவர்-சிறுமிகளை நரபலி கொடுப்பதற்காக பூஜைகள் நடத்தினாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளார்கள். இந்தநிலையில் பெண்சாமியார் நடத்தி வந்த மடத்தை பொதுமக்கள் சூறையாடினார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில்் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்