![](admin/uploads/.5f17022ef0ed76.18079808.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாகர்கோவில்: மார்த்தாண்டத்தை அடுத்த பல்லன்விளை, செம்பன்விளையை சேர்ந்தவர் ஷஜூப் (வயது 46). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு பள்ளி வேனில் சென்று வருவார். காலையில் பள்ளி வேனில் செல்லும் மாணவி மாலையில் அதே வேனில் வீடு திரும்புவார்.
நேற்றும் இதுபோல மாணவி பள்ளி முடிந்து வேனில் வீடு திரும்பினார். பள்ளி வேனை டிரைவர் குணசேகரன் (63) வேகமாக ஓட்டினார். வேன் மார்த்தாண்டம் கிறிஸ்டல் தெரு வளைவில் திரும்பியது. அப்போது வேனில் இருந்த மாணவி, வேனின் அவசர வழி வாயில் வழியாக தூக்கி வீசப்பட்டார். இதில் சாலையில் விழுந்த மாணவி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
இதனை கண்டு வேனில் இருந்த சகமாணவிகள் அலறி துடித்தனர். அந்த வழியாக சென்றவர்களும் பதறியடித்து ஓடி வந்தனர். அவர்கள் சாலையில் விழுந்த மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் பற்றி அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்து குறித்து விசாரணை நடத்தி குணசேகரன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.