![](admin/uploads/.5eccba9c3e3790.35931322.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் சுயேச்சையாக இரமேஷ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் அகர வரிசைப்படி 4-வது இடத்தில் இருந்தது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிப்பட்டியலில் இவரது பெயரின் முதல் எழுத்தான ‘இ’ நீக்கப்பட்டு ரமேஷ் என்று குறிப்பிட்டு 9-வது இடத்தில் இருந்தது. இதை கண்டித்து தேர்தல் ஆணையத்துக்கும், அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் கடந்த 4-ந் தேதி இரமேஷ் மனு அளித்திருந்தார். ஆனால் நேற்று வரை அந்த மனு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் வேட்பாளர் பட்டியலில் தமிழ் அகர வரிசைப்படி சரியான இடமான 4-வது இடத்தை தனக்கு கொடுக்குமாறு வலியுறுத்தி, அவர் நேற்று காலை தனது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைக் கண்ட போலீசார் வேட்பாளர் இரமேசை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அழைத்து சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சுயேச்சை வேட்பாளர் இரமேஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.