Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு 1½ லட்சம் உணவு பொட்டலம்

நவம்பர் 12, 2022 03:46

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா திரு.வி.க. நகர் தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா கொசு வலை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- முதல் கட்டமாக சாலை ஓரத்தில் வசித்து வரும் மக்களுக்கும், நீர்நிலைப் பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கும் கொசு வலைகள் வழங்கப்பட உள்ளது. கடந்த பத்து நாட்களாக சென்னையில் தொடர் மழை பெய்து வந்தாலும் மாநகராட்சி பணியாளர்கள் துரிதமாக பணியாற்றி வருகின்றார்கள். 

இதனால் எந்த பகுதியிலும் மழை நீர் தேக்கம் இல்லாத சூழலே நிலவுகிறது. சாலையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 15,000 பேருக்கு மாநகராட்சி சார்பில் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால் பணியினால் சேதம் அடைந்துள்ள சாலைகளுக்கு பேட்ச் வொர்க் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைக்காலம் முடிந்த பிறகு முழுமையாக சாலைகள் அமைக்கும் பணி நடைபெறும். சென்ற ஆண்டு பருவ மழையின் போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர், கழிவுநீர் தேங்கி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு எந்த பகுதியிலும் மழைநீர் தேங்கவில்லை. 

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து குடிநீர் வாரியம், மின்சாரத்துறை என்று அனைத்து துறையும் ஒருங்கிணைந்து பருவமழை காலத்தில் போர்க்கால அடிப்படையில் செயலாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்