Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு 27-ந் தேதி தொடக்கம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

மே 11, 2019 11:56

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் 2019-20-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி முதல் கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பங்கள் வாங்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் வழங்கப்பட வேண்டும். அதற்கு பிறகு வந்து சேரும் விண்ணப்பங்கள் தாமத விண்ணப்பங்களாக கருதப்படும்.

பட்டப்படிப்புகளுக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு வருகிற 27-ந் தேதி முதல் ஜூன் மாதம் 3-ந் தேதி வரை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதற்கு வரும்போது மாணவர்கள் பிளஸ்-2 மதிப்பெண் பட்டியலோடு, பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியலை கொண்டு வர வேண்டும். இது 2017-18-ம் கல்வியாண்டில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்து மார்ச் 2019-ல் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

சி.பி.எஸ்.இ. முறையில் பயின்று பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வந்த நாளில் இருந்து 10 வேலை நாட்கள் என்ற அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவும் வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சி.பி.எஸ்.இ. தவிர பிற மாணவர்களுக்கு இந்த தேதி நீட்டிப்பு பொருந்தாது.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்பத்தோடு வழங்கப்பட்டு உள்ள தகவலறிக்கையில் குறிப்பிட்டு உள்ளவாறு வருகிற 27-ந் தேதி முதல் கலந்தாய்வு இக்கல்லூரியில் பாவேந்தர் அரங்கத்தில் நடைபெறும்.

தகவலறிக்கையில் கலந்தாய்வு தேதி, பாடப்பிரிவு, தகுதி மதிப்பெண் ஆகிய விவரங்கள் தெளிவாக அட்டவணையிட்டுத் தரப்பட்டு உள்ளன. அதன்படியே மாணவர்கள் அவரவர் மதிப்பெண்ணுக்கேற்ப கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்குத் தனியே கலந்தாய்வுக்கென கடிதம் எதுவும் அனுப்பப்பட மாட்டாது.

இந்த தகவலை திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி முதல்வர் சுப்பையா தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்