Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூன்றாவது அணியின் முயற்சி பலிக்குமா?: பாரளுமன்ற தேர்தல்

மே 13, 2019 08:12

புதுடெல்லி: கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் பெரும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இத்தனை  இடங்களை பாஜக வென்றதற்கு ஒரு முக்கிய காரணம், மத்திய அரசை தீர்மானிக்கும் 10 பெரிய மாநிலங்களில் 7 மாநிலங்களில் பெரும்பான்மையான இடத்தை அக்கட்சி வென்றதுதான். உத்தரபிரதேசம், பீகார், குஜராத், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

நாட்டில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  273 பாராளுமன்ற தொகுதிகள் இந்த 7 மாநிலங்களிலும் அடங்கும். இது மொத்தம் உள்ள தொகுதிகளில் 36 சதவீதமாகும்.

பாராளுமன்ற தேர்தலில்  6 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்து உள்ளன.  2019  பாராளுமன்ற தேர்தலில் வட மாநிலங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான தொகுதிகளை பாரதீய ஜனதா இழக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வரும் தேர்தலில் பாரதீய ஜனதா பெரும்பான்மை பெற வேண்டும் என்றால் குறைந்தது இங்கு 196 தொகுதிகளாவது கிடைக்க வேண்டும். இது சாத்தியமா  என்பது கேள்விக்குறியே?

பாரதீய ஜனதாவுடன் சென்றமுறை கூட்டணி கட்சிகளாக இருந்த பல கட்சிகள்  தற்போது எதிர்தரப்பில் மோடிக்கு எதிராக முறுக்கி கொண்டு நிற்கின்றன. கடந்த முறை உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாரதீய ஜனதா 71 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது.

ஆனால் இந்த முறை அங்கு கூட்டணி நிலவரங்கள்  மாறி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி வைத்து போட்டிடுகின்றன. காங்கிரஸ் தனித்து விடப்பட்டு உள்ளது.

2014 தேர்தலைப்போல இந்தமுறை பா.ஜ.க.வினால் எளிதாக வெற்றிபெற முடியாது. அதுபோல, காங்கிரஸ் கட்சியும் எளிதில் வெற்றி பெற்றுவிடமுடியாது.

கடந்த பல கருத்து கணிப்புகளிலும் பாஜக, காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றே வெளியாகி உள்ளது.

இந்தியா டுடே, சிஓட்டர்ஸ், ஏபிபி நியூஸ், இந்தியா டிவி, டைம்ஸ் நவ், சிஎன்எக்ஸ், ஹர்வி, டெக்கான் ஹெரால்டு  ஆகிய செய்தி நிறுவனங்கள் ஆகஸ்ட்  2015-ல் இருந்து 19-க்கும் மேற்பட்ட கருத்து கணிப்புகளை நடத்தி உள்ளன. முதலில் பாரதீய  ஜனதா மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பில் தகவல் வெளியானது. ஆனால் கடந்த 10 கருத்து கணிப்புகளில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்க போவதில்லை என முடிவுகள் வெளியாகி உள்ளன.

6 கட்ட தேர்தலுக்குபின்னும்  காங்கிரஸ், பாரதீய ஜனதா  இரு தேசிய கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என கருதப்படுகிறது.

2014-ஆம் ஆண்டை போல யாரும் மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கப்போவது இல்லை, கூட்டணி ஆட்சி என்கிற  நிலைதான். பலம் பெற்றுள்ள  மாநிலக்கட்சிகள் தாம் அடுத்த பிரதமரை தீர்மானிக்கிற சக்திகளாக இருக்க போகின்றன. இதைத்தான் கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

அதேபோல், தேர்தலுக்குப்பிறகு பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க மம்தா பானர்ஜியின் திரிணாமுல், மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி ஆகியவை ஆதரவு அளிக்கும் என்ற நம்பிக்கை காங்கிரசுக்கு உள்ளது.

இரண்டுமே நடக்காவிட்டால் மம்தா, மாயாவதி, அகிலேஷ் போன்றவர்கள் ஆட்சி அமைக்க வழிவிட்டு அவர்களுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முன் வரலாம்.

தற்போது மாநிலங்களில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள மாநில கட்சிகள் தேர்தல் முடிவுக்கு பிறகு தங்கள் நிலையை மாற்றி கொள்ளக்கூடும்.

தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்க பாஜக, காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய கூட்டணிகள் உருவாகலாம்.

இதற்கான முயற்சிகளில்  தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு  ஆகியோர் போட்டிப்போட்டு ஈடுபட்டு வருகின்றனர்.

மத்தியில், பிரதமராகும் என்ற ஒரு நம்பிக்கையில்  தெலுங்கானா முதல்வரும்,  தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவருமான கல்வகுந்தல சந்திரசேகர ராவ் எனப்படும் கே.சி.ஆர்., தெலுங்கானாவின் முன்னேற்றத்திற்காக உறுதியுடன் போராடி வரும் வேளையில், நாட்டின் முக்கிய தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

மம்தா பானர்ஜியை சந்தித்த பின், மே 6-ந்தேதி பினராயி விஜயனை சந்தித்தார். மூன்றாம் அணியை கட்டமைக்கும் நோக்கத்துடன், அவர் இன்று மாலை தி.மு.க. தலைவர் ஸ்டாலினை  சந்திக்க திட்டமிட்டுள்ளார். அடுத்து கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்திக்கிறார். மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

சந்திரபாபு நாயுடு கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 19-ம் தேதி அன்று எதிர்க்கட்சித் தலைவர்களை தனித்தனியாகச் சந்திக்க இருக்கிறார்.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை வரும் மே 21ம் தேதி கூட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் கூட்டத்தில் மாயாவதி , மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் தெரியாமல் கூட்டத்தைக் கூட்டுவதால் ஒரு பலனும் ஏற்படாது என்றும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 23ம் தேதி அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் வாக்குகள் எண்ணிக்கையிலும், முன்னணி நிலவரத்திலும்தான் இருக்கும் என்பதையும் மம்தா பானர்ஜி  சுட்டிக் காட்டியுள்ளார்.

இதே கருத்தை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் தெரிவித்திருப்பதால் மே 21-ந்தேதி நடைபெற இருக்கும்  இக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்