![](admin/uploads/.5ce4edc5573070.33613766.gif)
Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி மாவட்டம் வடலிவிளையில், 3 நாட்கள் நடைபெற்ற பொங்கல் விழாவில், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்! ஆண்களுக்கு இணையாக, இளவட்டக்கல் தூக்கி அசத்திய இளம் பெண்கள்!
திருநெல்வேலி :- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், ராதாபுரம் தாலுகா, பணகுடியை அடுத்துள்ள வடலிவிளை கிராமத்தில், அங்குள்ள நாடார் பேரவை சார்பாக, 3 நாட்கள் (ஜனவரி.15, 16 &17) தொடர்ச்சியாக பொங்கல் விழா நடைபெற்றது.
முதல் நாள் பொங்கல் தினத்தன்று, ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, பாரம்பரிய விளையாட்டு போட்டி தொடங்கியது. வடம் பிடித்து இழுத்தல், வழுக்குமரம் ஏறுதல், தேங்காய் உரித்தல், குண்டு எறிதல், பானை உடைத்தல், புதையல் தேடுதல் ஆகியவற்றுடன் ஆண்களுக்கு, ஒரு கையால் உரலை தூக்குதல், தோளில் படாமல் 98 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லை தூக்குதல், 114 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லை தூக்கி, தலையை சுற்றி தூக்கி எறிதல், மற்றும் 129 கிலோ இளவட்டக்கல்லை தூக்குதல் ஆகியவையும் நடைபெற்றன.
பல இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சாதனை நிகழ்த்தினர். ஆண்களுக்கு போட்டியாக சில பெண்களும் 40 கிலோ எடை கொண்ட உரலை தூக்கிப்போட்டு தங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தினர். பெண்கள் உரல் தூக்கும் போட்டியில், ராஜகுமாரி முதல் பரிசு பெற்றார்.
தங்க புஷ்பம் இரண்டாவது பரிசு பெற்றார். 129 கிலோ இளவட்டக்கல்லை தூக்கி சாதனை நிகழ்த்தியமைக்காக, செல்லப்பாண்டியன் முதல் பரிசும், அருண் வெங்கடேஷ் 2-ஆவது பரிசும் பெற்றனர்.
முன்னதாக தமிழக சபாநாயகர் மு.அப்பாவு இந்த போட்டிகளை துவக்கி வைத்து, சிறிது நேரம் கண்டு களித்தார்.