![](admin/uploads/.61d98ae94006e2.82365474.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாளையங்கோட்டையில்,அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து அடிக்கப்பாய்ந்த, ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!
திருநெல்வேலி :- பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக இருந்து வருபவர் திராவிட மணி. இவர், இன்று (ஜனவரி.31) காலையில், பணியில் இருந்த போது, அவருடைய அலுவலகத்தில் வைத்து, செல்லம் என்ற ஒப்பந்தக்காரர், ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானமாக வைக்கப்படாத, ஒரு பணிக்கான, ஒப்பந்த உத்தரவு மற்றும் ஆவணங்களை, தயார் செய்து தருமாறு, கட்டாயப்படுத்தி கேட்டிருக்கிறார்.
ஆனால், மேலாளர் திராவிட மணியோ, ஒன்றியக்குழுக் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றிய பிறகுதான், ஒப்பந்த உத்தரவு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களை, தர இயலும்! என்று, மென்மையான முறையில், பதில் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த, ஒப்பந்தக்காரர் செல்லம், உடனடியாக அலுவலக மேலாளர் திராவிட மணியை, கையை ஓங்கி, அடிக்கப் பாய்ந்துள்ளார். இவ்வாறு, ஒருமுறை அல்ல, இரண்டு முறைகள் முயன்ற போது, மேலாளரின் பக்கத்து இருக்கைகளில் இருந்த, சக ஊழியர்கள் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடாதபடி, பக்குவமாக தடுத்து நிறுத்தி விட்டனர்.
அத்துடன் அவர்கள் நின்று விடாமல், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்து, அடிக்கப்பாய்ந்த ஒப்பந்ததாரர் செல்லத்தை கண்டித்து, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, கண்டன ஆர்ப்பாட்டத்திலும், ஈடுபட்டனர்.
இதனால், அங்கு சிறிது நேரம், பரபரப்பு நிலவியது. கண்டன ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு, மேலாளர் திராவிட மணி கூறுகையில், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், மொத்தம் 72 ஒப்பந்ததாரர்கள் இருக்கின்றனர். இவர்களில் செல்லம் என்பவர் மட்டுமே, அடிக்கடி இதுபோன்ற தகராறுகளில், ஈடுபட்டு வருகிறார்.
எனவே, அவர் மீது, மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் மூலம், சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.