Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தகவல்

பிப்ரவரி 21, 2023 05:48

நாமக்கல் :- படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில், மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200/- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/- மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ. 400/- மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600/- வீதம் மூன்றாண்டு காலத்திற்கும் மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை இனி வரும் காலங்களில் மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600/- மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.750/- மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000/- வீதம் பத்தாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் மாதம் தோறும் வழங்கப்படுகிறது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோரை பொறுத்தமட்டில் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 /- க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. இந்நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது.

மேலும் மனுதாரர் உதவித் தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் www.tnvelaivaaippu.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்விண்ணப்பத்தில் 7ம் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் கையொப்பம் பெற்று வருமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்