Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கிராமம், கிராமமாக மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

மே 15, 2019 05:44

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். அவரது பிரசார வாகனத்தில் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர்.

2-வது கட்ட பிரசாரம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது கட்டமாக பிரசாரம் மேற்கொண்டார்.

முன்னதாக தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவர் காரில் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட ராமச்சந்திரபுரத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த பதனீரை மு.க.ஸ்டாலின் குடித்தார். பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

சிறுநீரக பாதிப்பு

தொடர்ந்து காமராஜர் நகர், கூட்டாம்புளி ஆகிய இடங்களிலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அவருடன் மக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இங்குள்ள தண்ணீரை குடித்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் அவரிடம் கூறினர். அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், “உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அ.தி.மு.க அரசு தாமதப்படுத்தி வருவதால் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அடிப்படை வசதிகள் அனைத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

பறக்கும்படை சோதனை

முன்னதாக தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று காலை மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் அவரது பிரசார வாகனம், பாதுகாப்பு வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தன. வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக வாகனங்களில் பணம் வைத்திருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் 2 குழுவினர் நேற்று காலை ஓட்டலுக்குள் செல்லும் வாகனம் மற்றும் வெளியே வரும் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது மு.க.ஸ்டாலினை அழைத்துவருவதற்காக விமான நிலையத்துக்கு புறப்பட்ட அவரது வாகனங்களையும் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அதிகாரிகள் வாகனங்களை முழுமையாக சோதனை நடத்தினர். ஆனால், வாகனங்களில் இருந்து பணமோ, பரிசு பொருளோ பறிமுதல் செய்யப்படவில்லை.
 

தலைப்புச்செய்திகள்