![](admin/uploads/.5cef6edd1ce186.24911395.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: பா.ஜ.கவின் மக்கள் தொடர்பு பேரியக்கம் எனும் அமைப்பு சார்பில் நாமக்கல் கோஸ்டல் ரெஸிடென்சியில் அனைத்து வணிகர்கள், தொழிலதிபர்கள், சிறு /குறு நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பாஜக நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் கலந்து கொண்டு வணிகர்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் சலுகைகள் குறித்து பேசினார்.
இக்கூட்டத்தில் மத்திய அரசு வழங்கும் வணிகர்களுக்கான காப்பீட்டு திட்டம், வங்கிகளில் கடன் வழங்கும் திட்டம், GST, பண மதிப்பிழப்பு, சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவிகள் குறித்து விளக்கப்பட்டன. மேலும் நிதி நிர்வாகம் மற்றும் வங்கி அதிகாரிகளின் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வணிகர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
மக்கள் தொடர்பு பேரியக்கத்தின் அழைப்பினை ஏற்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், GST முறையை எளிமைப்படுத்த வேண்டும் எனவும், உணவு பொருட்கள் மீதான வரியை நீக்க வேண்டும் எனவும், அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து நாமக்கல் நகர மளிகை வர்த்தகர் சங்க தலைவர் STVG பத்ரி நாரயணன், நாமக்கல் LPG டேங்கர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தராஜன் ஆகியோர் அவர்கள் சார்ந்த தொழிலில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட டயர் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் ராஜூ, பேரமைப்பு சார்பில் மாவட்ட இணை செயலாளர் தேவி உதயகுமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராயல் பத்மநாபன், இணை அமைப்பாளர் எவரெஸ்ட் ராஜா, செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் கொல்லிமலை அனைத்து வணிகர் நலசங்கத்தின் செயலாளர் பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை விவசாய அணி மாநில செயலாளர் ராதிகா மற்றும் நலத்திட்ட பிரிவு துணை தலைவர் லோகநாதன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சி நிறைவில் பாஜக வர்த்தகர் பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார் நன்றி கூறினார்.