![](admin/uploads/.60d4213c8424d8.06066167.jpg)
Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ கட்டடங்கள் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ சேவைகளை வழங்கிடும் வகையில், அவசர சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி, அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடுதல் மருத்துவக் கட்டிடம் கட்டப்படவுள்ளதையொட்டி, அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மருத்துவ கட்டட வரைபட ஒப்புதல், திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்து ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், புன்செய் இடையார் மேல்முகம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணைய வழி பட்டா வழங்கிடும் ஏதுவாக வரன் முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வகுரம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19.53 லட்சம் மதிப்பீட்டில் வகுரம்பட்டி முதல் லத்துவாடி செல்லும் சாலை பலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட தரக்கட்டுப்பாடுகளின் படி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருள், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மரு.கனிமொழி, பரமத்தி வேலூர் வட்டாட்சியர் கலைச்செல்வி, நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், ஜெயக்குமார், வகுரம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அ.ராஜாரகுமான் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.