Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாயப்பட்டறை கழிவு நீர் சுத்திகரிப்பு முறை இயக்கம் குறித்த கூட்டம்

ஜுலை 14, 2023 01:09

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் உள்ள சலவை மற்றும் சாயப்பட்டறை தொழிற்சாலைகளில் பூஜ்ய கழிவு நீர் சுத்திகரிப்பு முறை இயக்கம் குறித்த விரிவான விளக்க கூட்டம் குமாரபாளையத்திலுள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

இன்றைய தினம் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சிறு, குறு, பெரு சாயபட்டறை உரிமையார்கள், சலவைத் தொழில் செய்து வருபவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும் சாயப்பட்டறை கழிவுகள் காவேரி ஆற்றில் கலப்பதாக புகார்கள் வரபெற்றன. இதன் அடிப்படையில் பல்வேறு சாயப்பட்டறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாயப்பட்டறை மற்றும் சலவைத் தொழில் நலிவடையமாலும், தொழிலாளர்களின் வாழ்வதாரம், பொதுமக்களின் சுகாதாரமும் பதிப்படையமால் இருக்க பூஜ்ய கழிவு நீர் சுத்திகரிப்பு முறை இயக்கத்தினை நல்ல முறையில் நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது. 

இதில் திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே பூஜ்ய கழிவு நீர் சுத்திகரிப்பு முறையினை தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாயப்பட்டறை தொழிலானது நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் 122 சலவை மற்றும் சாயப்பட்டறைகள் உள்ளன.

மேலும் இந்த தொழிலை பாதுகாத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டத்தின் கீழ் ரூ.303 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்து தமிழ்நாடு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பரிசீலினை செய்து நிதி ஒப்பளிப்பிற்கு மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

மேற்படி, நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டவுடன் பொது சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்டுள்ள பல்லக்கபாளையம், எலந்தகுட்டை மற்றும் ஓ.சௌதாபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளது.

இதில் ஒருங்கிணைந்த பொது சுத்திகரிப்பு மையம் அமைப்பதன் மூலம் சலவை மற்றும் சாயப்பட்டறை கழிவு நீரற்ற சுத்திகரிப்பு முறை உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில் இன்றையதினம் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்கவுள்ள இடத்தினை நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மத்திய, மாநில அரசின் நிதி ஒதுக்கீடு பெறுவதற்காக அனைத்து பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் பொது சுத்திகரிப்பு மையம் அமைத்து சலவை மற்றும் சாயப்பட்டறைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய குமாரபாளையம் சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன், சுற்றுச்சூழல் பொறியாளர் (பறக்கும் படை) வனஜா, நகராட்சி ஆணையர்கள் மு.தாமரை (பள்ளிபாளையம்), சென்னுகிருஷ்ணன் (நாமக்கல்), ராஜேந்திரன் குமாரபாளையம் (பொ) ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், சாய மற்றும் சலவை தொழிற்சாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்