Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரும்புக்கு டன் ஒன்றுக்கு 5 ஆயிரம் வழங்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜுலை 21, 2023 11:34

நாமக்கல்: ஒன்றிய பா.ஜ.க. அரசு 2023-24 பருவத்திற்கு 10.25 சதவீதம் பிழிதிறன் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 3150/- அறிவித்ததை கண்டித்தும் 9.5 சதவீதம் பிழிதிறன் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5000/- வழங்கிடக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்  மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு நடைபெற்றது.

போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மணப்பள்ளி. பெருமாள் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் கண்ணன் துவக்கி வைத்து பேசினார்.போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பெருமாள், மோகனூர் சர்க்கரை ஆலை இயக்குனர் லட்சுமி பாலசுப்ரமணியம், தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் பேசினர். 

போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ்.கே.சிவச்சந்திரன்,  தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஜோதி, சதாசிவம், ராஜேந்திரன், தங்கரத்தினம்,  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் ராமநாதன், பாலு, சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி கிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.

போராட்டத்தின் போது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பெருமாள் பேசியதாவது, ஒன்றிய பா.ஜ.க. அரசு 2023-24 பருவத்திற்கு 10.25 சதவீதம் பிழிதிறன் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3150/- ம், 9.5 சதவீதம் பிழிதிறன் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2919/- விலை அறிவித்துள்ளனர்.

மேலும் தமிழ் நாட்டில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.2919/- மட்டுமே கிடைக்கும். ஒன்றிய அரசு ஒரு டன் கரும்புக்கு உற்பத்தி செலவுக்கு ரூ. 1570/- என கணக்கிட்டு உற்பத்தி செலவுடன் அரசு நூறு சதவீதம் சேர்த்து விலை உயர்த்தி அறிவித்துள்ளதாக அறிவித்துள்ளனர். உண்மையாக ஒரு டன் கரும்பு உற்பத்தி செலவு ரூ.2795/- ஆகிறது.

விவசாயிகளின் பாதுகாவலன், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறும் மோடி அரசு, நாடு முழுவதும் உள்ள ஐந்து கோடி கரும்பு விவசாயிகளை வஞ்சித்துவிட்டது.

உரிய விலை அறிவிக்காத மத்திய அரசை கண்டித்தும், 9.5 பிழிதிறன் கரும்புக்கு ரூ.5000/-விலை வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் திரளான விவசாயிகள் கரும்புகளுடன் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்