Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பம் குறித்து அமைச்சர் மதிவேந்தன் பேச்சு

ஜுலை 22, 2023 02:05

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் பேரூராட்சியில் ரூ.90.76 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தையை வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலையில் திறந்து வைத்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.90.76 இலட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரச்சந்தையின் மூலம் இந்த பகுதியில் 350 குடும்பங்கள் பயன்பெற உள்ளன. 

தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்கள். பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். 

அந்த வகையில் மகளிருக்கான இலவச பேருந்து பயண சலுகை திட்டம், புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் திட்டத்தினை வருகின்ற செப்டம்பர் 15 ஆம் நாள் அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்கள். 

அதனையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குடும்பத்தலைவிகள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் அருகில் நடைபெற உள்ள விண்ணப்ப பதிவு முகாமில் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் பாண்டமங்கலம் பேரூராட்சியில் 3 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்தல், சமுதாயக்கூடம் கட்டுதல், சமுதாயக்கூடம் புதுப்பித்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், சிமெண்ட சாலையை அமைத்தல், சாலையை பலப்படுத்துதல், நியாயவிலை கடை அமைத்தல் என ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித்திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றது. 

மேலும் பாண்டமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் செய்து தரப்படும் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பேசினார்.  

இந்நிகழ்ச்சியில் கபிலர்மலை ஒன்றிக்குழு உறுப்பினர் சண்முகம், வட்டாட்சியர் பரமத்திவேலூர் கலைச்செல்வி, பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் சி.சோமசேகர், துணைத்தலைவர் பெ.முருகவேல், வார்டு உறுப்பினர்கள் மஞ்சுளா, ம.சிவகாமி, சோ.சுகந்தி, ரா.நித்யா, த.ஜெயராஜ், ம.முருகன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்