![](admin/uploads/.60daa6867e6713.91220994.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் கிராமம், ஆலம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட சின்னாகவுண்டம்பாளையம் பகுதியில்
தீ விபத்தினால் சேதமடைந்த வீடுகளை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் கிராமம் ஆலம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட சின்னாகவுண்டம்பாளையம் பகுதியில் சாந்தாமணி என்பவருக்கு தொகுப்பு வீடு உள்ளது.
இதன் முன்புறம் கீற்று கொட்டகை அமைத்து சமையலறையாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 11 ந் தேதி இரவு சுமார் 9 மணியளவில் சாந்தாமணியின் கீற்றுக் கொட்டகையில் தீ பற்றியுள்ளது.இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள 3 கூரை வீடுகளும் பொருள்களோடு முழுமையாக சேதமடைந்து விட்டன.
இந்த தீ விபத்தில் வீடுகள் பாதிப்படைந்தவர்களின் சந்தா மணி, லக்ஷ்மணன், குமாரி,
தேன், ஈஸ்வரி ஆகியோர் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் மைனா என்பவர் வீட்டை விட்டு வெளியே வரும் போது சிறியதாக அடிபட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்ட்டு தற்போது நலமுடன் உள்ளார். மேற்படி பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தில் உள்ள நபர்களை அருகில் உள்ள சின்ன கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, சேலை, வேட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தீ விபத்தினால் சேதமடைந்த வீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட அவசரகால உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர், தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்.
மேலும், தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தக பை உள்ளிட்டவைகளை வழங்கிட ஒரு குடும்பத்திற்கு பொறுப்பு அலுவலர் நியமித்து பணிகளை உடனடியாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், தீ விபத்தினால் முற்றிலுமாக வீடு சேதமடைந்தவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் தற்காலிகமாக தங்குவதற்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை 24 மணி நேரத்திற்குள் செய்து தர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமையல் பாத்திரங்கள் அடங்கிய தொகுப்பு, வேஷ்டி, சேலை, பாய், போர்வை ,கொசு வலை, கம்பளி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் ரெட் கிராஸ் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. உணவுப் பொருட்கள் வழங்கல் துறையின் சார்பாக 10 கிலோ அரிசி மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், குமாரபாளையம் வட்டாட்சியர் சண்முகவேல் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.