Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெனிவா ஒப்பந்த தினத்தையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ஆகஸ்டு 14, 2023 10:50

நாமக்கல்: ஜெனிவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில், ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

ரெட்கிராஸ் இயக்கம் உருவாக்கிய மனித நேய சட்டங்கள் 1949, ஆகஸ்ட் 12 ல், 4 ஜெனிவா ஒப்பந்தங்களாக வடிவம் பெற்றது. அன்றைய நாளை ஆண்டு தோறும், ஜெனிவா ஒப்பந்த தினமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி, நாமக்கல்லில் ஜெனிவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு, மாவட்ட ரெட்கிராஸ், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி,  நடைபெற்றது.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய பேரணியை, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து துவக்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமாமகேஸ்வரி, நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி முன் துவங்கிய பேரணி, தலைமை தபால் நிலையம், பாரத ஸ்டேட் பேங்க், திருச்சி ரோடு, மணிக்கூண்டு, மோகனூர் ரோடு வழியாகச் சென்று மீண்டும் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவுற்றது.

பேரணியில், சாலை போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம், விபத்துக்களை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் திரளான பள்ளி மாணவ, மாணவிகள், வட்டார போக்குவரத்து துறையினர், போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்