Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் வளையப்பட்டி,புதுப்பட்டி, பரளி ,அரூர் பகுதிகளில் சிப்காட் -தொழிற்பேட்டை அமைவதை கைவிட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளாத சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினரை கண்டித்தும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டும் சேந்தமங்கலம் பெருமாள் கோவில் அருகில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தை வாசித்து போராட்டம் நடைபெற்றது.
மோகனூர் ஊராட்சி ஒன்றியம் வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தமிழக அரசு சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதையொட்டி வளையப்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் தொழிற்பேட்டைக்கான நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சிப்காட் அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஏற்கனவே உண்ணாவிரதம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், மனிதசங்கிலி, நெற்றியில் நாமம் போட்டும்,அக்னி சட்டி ஏந்தி, சாலையில் பாலை ஊற்றி உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கைவிடக்கோரி
சேந்தமங்கலம் பெருமாள் கோவில் அருகில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தை வாசித்து போராட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
சிப்காட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு ராம்குமார், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், கொமதேக சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் சுந்தர் ராஜ், விவசாய அணி அமைப்பாளர் பரமசிவம் மற்றும் பாஜக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.