Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச் சிலை, அறிவகம் காணொளி வாயிலாக மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

செப்டம்பர் 24, 2023 01:00

நாமக்கல்: தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை நடத்தும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச் சிலை மற்றும் அறிவகம் திறப்பு விழா நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள சிவியாம்பாளையம் கொண்டம்பட்டிமேடு சிலம்பொலியார் நகரில் நடைபெற்றது. 

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முனைவர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆகியோர் அருளுரை வழங்கினர். விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் வரவேற்புரை ஆற்றினார். பி.ஜி.பி குழுமத் தலைவர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி தலைமை தாங்கினார்.

விழாவில் வனத்துறை அமைச்சர் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் பெ.இராமலிங்கம் சேந்தமங்கலம் கே.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச் சிலை மற்றும் அறிவகம் ஆகியவற்றை காணொளி வாயிலாக கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து மலர் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் திருவுருவச்சிலை மற்றும் அறிவகம் ஆகியவற்றை திறந்து வைத்தார். 

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் திருவுருவச்சிலை மற்றும் அறிவகம் ஆகியவற்றை திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார் அப்போது, செல்லப்பன் என்ற பெயரே மறைந்து 'சிலம்பொலி', 'சிலம்பொலியார்' என்று அழைக்கப்பட்டவர். அவரது உரையைக் கேட்டு, செல்லப்பன் என்ற பெயரை 'சிலம்பொலி செல்லப்பன்' என அழைக்கத் தொடங்கினார் 'சொல்லின் செல்வர்' இரா.பி. சேதுப்பிள்ளை. சொல்லின் செல்வரின் வாக்கு தான் பலித்தது. வாழ்நாள் முழுவதும் சிலம்பொலியாராகவே வாழ்ந்தார்.
 

சிலம்பொலியார் என்று தலைவர் கலைஞர் அவர்களால் அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படக் கூடியவரின் சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்காக உள்ளபடியே நான் பெருமை அடைகிறேன்.

தமிழ்நாடு எங்கும் சுற்றிச் சுழன்று, சிலப்பதிகாரத்தின் மாண்பினையும் செந்தமிழின் மேன்மையையும் திறம்பட முழங்கி வருபவர் என்றும், சீரிய செயல் புரியும் நண்பர் என்றும், இளங்கோவடிகளின் செந்தமிழ்க் காப்பியத்தில் மூழ்கித் திளைத்தவர் என்றும்,
முத்துக் குளித்து அதில் நல்ல சிப்பிகளை மேலே கொண்டு வந்து கருத்தோவியம் படைத்தவர் என்றும், தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர் தான், சிலம்பொலியார் அவர்கள். எப்போது பார்த்தாலும் முகம் மலர்ந்த சிரிப்புடன் இருக்கும் சிலம்பொலியாரைச் சிலையாகப் பார்க்கும்போதும், நேரில் பார்ப்பதைப் போன்றே இருக்கிறது! சிலம்பொலியார் எழுதிய 'சிலம்பொலி' என்ற புத்தகத்தை 1975-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான் சென்னையில் வெளியிட்டார். “எல்லோரும் ஆராய்ச்சி செய்து பட்டம் பெறுவார்கள்.

செல்லப்பன் தான் 'சிலம்பொலி' என்ற பட்டத்தைப் பெற்ற பிறகு, ஆராய்ச்சி நூலை வெளியிட்டு இருக்கிறார்” என்று சொன்னார் கலைஞர் அவர்கள். அன்று, சிலம்பொலி புத்தகத்தை வெளியிட்டவர் கலைஞர் அவர்கள். இன்று, சிலம்பொலியார் சிலையை நான் திறந்து வைக்கிறேன். இது எனக்குக் கிடைத்த பெருமை!

எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து வாழ்நாளெல்லாம் தமிழை விளைவித்த, 'தமிழ் உழவர்'தான் நம்முடைய சிலம்பொலியார் அவர்கள். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, பள்ளித் தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குநர் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என வளர்ந்தார்.

கல்லூரியில் ஙி.கி., கணக்கு பாடம் படித்தாலும், இவர் தமிழ்ப் பற்றாளராக வளர்வதற்கு திராவிட இயக்கம் காரணமாக அமைந்துள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், குன்றக்குடி அடிகளார், தலைவர் கலைஞர் ஆகியோரின் உரைகளைக் கல்லூரிக் காலத்தில் கேட்டு உணர்ச்சி பெற்றார்.

குறிப்பாக, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைகள்தான், இவரது தமிழ் ஒலிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. திருச்சி நேஷனல் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த காலத்தில் 'இந்தி இந்நாட்டுக்கு பொது மொழியாக இருக்கலாமா?' என்ற விவாதத்தில் கலந்து, 'இருக்கக் கூடாது' என்று பேசினார். கல்லூரி படிப்பைப் பற்றி கவலைப்படாமல் இத்தகைய உணர்ச்சியைப் பதிவு செய்தார்.

ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கி மாவட்டக் கல்வி அலுவலராக உயர்ந்தார் சிலம்பொலியார் அவர்கள். 1967-ஆம் ஆண்டு கழக ஆட்சி அமைந்தபோது, பேரறிஞர் அண்ணா அவர்கள் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தினார்.
அப்போது மாநாட்டுத் தனி அலுவலராக சிலம்பொலியார் அவர்களைத்தான் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் நியமித்தார்.

உலகத் தமிழ் மாநாட்டு மலரை உருவாக்கும் பொறுப்பும் அவருக்குத்தான் தரப்பட்டது.
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநராக இவர் பணியாற்றிய போது, இயக்குநர் பதவிக்கு இவர் விண்ணப்பிக்கவில்லை. "ஏன் விண்ணப்பிக்கவில்லை" என்று கேட்டவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள். 1976-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட போது, சிலம்பொலியாரைப் பழிவாங்கும் நோக்கத்துடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பொறுப்பில் இருந்து தகுதி இறக்கம் செய்து, பள்ளித் தலைமை ஆசிரியர் ஆக்கியது அன்றைய கவர்னர் ஆட்சி. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை கவர்னர் ஆட்சி என்றால் இப்படித்தான் நிர்வாகம் தெரியாமல் நடந்துள்ளது. 1989-ஆம் ஆண்டு கழக ஆட்சி மீண்டும் மலர்ந்ததும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நியமித்தார். 

பள்ளி ஆசிரியராக இருந்தாலும் - தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராக இருந்தாலும் - தமிழ்நாட்டு மேடைகளில் சிலம்பொலிக்காமல் இருந்தது இல்லை செல்லப்பனார். பழங்காலப் புலவர்களைப் போலவே புலமைத் திறனும், சொல்லாட்சியும், அதேநேரத்தில் தமிழ் உரிமைக்காகப் போராடும் உணர்ச்சியும் ஒருங்கே பெற்றவர் நம்முடைய சிலம்பொலியார். 

ஆயிரம் நூல்களுக்கு அணிந்துரை வழங்கி இருக்கிறார். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ் இலக்கியங்களைத் தொடர் சொற்பொழிவாக நடத்தியிருக்கிறார்.

புலவர் குழந்தையின் புரட்சி இலக்கியமான இராவண காவியத்தைத் தொடர் சொற்பொழிவாற்றிய பெருமையும் இவருக்குத்தான் உண்டு. 55 ஆண்டுகளாக 4 ஆயிரம் இலக்கியக் கூட்டங்களில் பங்கெடுத்து உரையாற்றி இருக்கிறார்.

எந்தப் பாடலைப் படித்தாலும் மனப்பாடமாக ஒப்பிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது.
தனது நூலகத்தில் 10 ஆயிரம் புத்தகங்கள் வைத்திருந்தார். இவர் அளவுக்கு இலக்கியத் தொடர் சொற்பொழிவுகள் நடத்திய தமிழறிஞர்கள் இருக்க மாட்டார்கள்.

சிலம்பொலி இலக்கியச் சிந்தனைகள் பெருங்கதை ஆராய்ச்சி  நெஞ்சை அள்ளும் சீறா
பாவேந்தர் ஓர் உலகக் கவிஞர் காப்பியக் கம்பரும் புரட்சிக் கவிஞரும் வளரும் தமிழ்சங்க இலக்கியத் தேன் ஆகியவை அவரது புகழ் பெற்ற நூல்கள். சிலம்பொலியாரிடம் அணிந்துரை வாங்குவது, தங்களது நூலுக்கு மகுடம் எனக் கருதி தமிழ் ஆராய்ச்சியாளர்கள் வாங்குவார்கள். தமிழ் இனிமையான மொழி என்பதை அவரது சொற்பொழிவுகளைக் கேட்கும் போது உணரலாம்.

புரட்சிக் கவிஞரின் கவிதைகளை அவர் சொல்லும் போது உணர்ச்சி கொப்பளிக்கும். இத்தகைய பெருமைக்குரிய தமிழ் அடையாளமாக விளங்கும் சிலம்பொலியார் அவர்களுக்குச் சிலை அமைப்பது மிக மிக மகிழ்ச்சிக்குரியது. அதனை திறந்து வைப்பதை என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய வாய்ப்பாகக் கருதுகிறேன் என்றார். 

நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

விழாவில் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளையின் இளங்கோ விருது மற்றும் ஒரு லட்சம் பொற்கிழியை சிலம்புச்செம்பல் புலவர் தமிழமுதன் பெற்றார். தமிழறிஞர்கள் முனைவர் மா.ராஜேந்திரன், முனைவர் மறைமலை இலக்குவனார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியாக சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை செ.கொங்குவேள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிகளை கவிஞர் தமிழன் ராகுல்காந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

அறிவகத்திற்கு சிவியாம்பாளையம் பூங்கோதை செல்லதுரை நிலம் வழங்கி உள்ளார். சிலை அமைப்பு குழு தலைவர் சு.குமாரசாமி, செ.ராஜேந்திரன், வை.சித்தார்த்தன், செயற்குழு உறுப்பினர்கள் சி.கா.செல்லப்பன், இரா.வெங்கடாசலம் ப.சம்பத்குமார், சி.கா.பழனிசாமி, மு.சேரலாதன், பூங்கோதை செல்லதுரை, இரா.அன்பழகன், ஆ.செல்வராஜ், சு.பெரியசாமி மற்றும் சிவியாம்பாளையம் ஊர் பொதுமக்கள், சிலம்பொலியாரின் சீர்மிகு மாணவர்கள், தமிழன்பர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆகியோர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இவ்விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் தேவராஜன், சிலம்பொலி செல்லப்பன் இல்லத்தினர் நா.புட்பராசு, முனைவர் மணிமேகலை, குமாரவடிவு செ.தொல்காப்பியன், கு.இராமலிங்கம், மருத்துவர் கௌதமி, செ.கொங்குவேள், மருத்துவர் ஈஸ்வரி மருத்துவர் செ.ராமகிருஷ்ணன், நகைமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்