Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்

நவம்பர் 28, 2023 11:44

நாமக்கல்: நாமக்கல் மளிகை மற்றும் பலசரக்கு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் ரங்கர் சன்னதி தெரு, பத்ரி காம்ப்ளக்ஸ் 3வது தளத்தில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு தலைமை தாங்கினார். நாமக்கல் நகர காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். 

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு, அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்றவற்றை வணிகர்கள் விற்பனை செய்ய கூடாது எனவும், மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

நகர காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் பேசும்போது, வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது மிக அவசியம் எனவும், கடைகளில் எக்காரணம் கொண்டும் ரொக்கத்தினை வைத்து செல்ல வேண்டாம் எனவும், கடை ஷட்டரில் சென்டர் லாக் பொருத்தி திருட்டினை தடுக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்க மாட்டோம் என வணிகர்கள் உறுதியேற்க வேண்டும் எனவும், அவ்வாறு விற்போர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் மாவட்ட காவல்துறைக்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் நாமக்கல் நகர மளிகை வர்த்தகர் சங்க தலைவர் பத்ரி நாராயணன், துணை தலைவர் ஜிக்கி ஜெகதீசன், பேரமைப்பு மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மளிகை கடை உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்