Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உடல் உறுப்புகள் தானம் செய்த சி.ராஜ்குமார் உடலுக்கு ஆட்சியர் ச.உமா மரியாதை

நவம்பர் 30, 2023 12:56

நாமக்கல்: உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருந்தார்.

நாமக்கல் மாவட்டம், சிங்கிலிப்பட்டி கிராமம், பொய்யேரியை சேர்ந்த சி.ராஜ்குமார் (வயது 41) சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

அவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், நாமக்கல் வட்டாட்சியர் சக்திவேல், எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல்  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்