Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வள்ளல் சிகரம், கலியுக கர்ணன் உடல் நாளை நல்லடக்கம்

டிசம்பர் 28, 2023 05:30

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த விஜயகாந்த் உடல் அவரின் சாலிகிராம இல்லத்துக்கு முதலில் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு குடும்ப உறுப்பினர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. முன்னதாக, விஜயகாந்த் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். அந்த இரங்கல் குறிப்பில், விஜயகாந்த் இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேடு வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு பொது மக்கள் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானது முதலே, அங்கு ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் குவியத் தொடங்கிவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாசலில் திரண்ட கட்சியினர், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் மல்க விஜயகாந்தின் உடலை காணக் கூடினர். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேற முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான தொண்டர்கள் கட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விஜயகாந்த் உடல் எடுத்துவரப்பட்ட வாகனத்தின் முன்பாக கண்ணீர்விட்டு அழதபடி அவரது மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் வந்தனர். வழிநெடுகிலும் விஜயகாந்தின் ரசிகர்கள், தேமுதிகவினர், கட்சித் தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகள், திரைப்பட நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், என பலரும் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரமாக ஊர்வலமாக வந்த விஜயகாந்தின் உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, திரை உலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், தேமுதிக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 விஜயகாந்தின் உடல் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், நாளை மாலை 4.30 மணியளவில் தேமுதிக அலுவகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியானது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளன.

 ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலி மற்றும் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய குடும்ப உறுப்பினர்கள் முடிவெடுத்தன் பேரில் வள்ளல் சிகரம், கலியுக கர்ணன் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்