Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவின் அலுவலகம் சென்னை கோட்டையில் செயல்படுகிறது. நேற்று பகலில் அவரது அலுவலகத்துக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் வந்தது. அந்த கடிதத்தை எழுதியவர் யார்? என்ற விவரம் இல்லை.
ஆனால் மதுரையில் இருந்து அந்த கடிதம் வந்திருப்பது தெரியவந்தது. அந்த கடிதத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தை சுற்றி வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த குண்டுகள் சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் மிரட்டல் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இதை படித்து பார்த்த சத்யபிரத சாகு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார். வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக மோப்பநாயுடன் சென்று சத்யபிரத சாகுவின் அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள்.
ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அது வெறும் மிரட்டல் கடிதம் என்று தெரியவந்தது. இதுகுறித்து கோட்டை போலீசில் கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கடிதத்தை அனுப்பியது யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.