Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது

மே 22, 2019 06:35

புதுடெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையம் கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி கூடி ஆலோசனை நடத்தியது. அதேபோல் ஒழுங்காற்று குழு கூட்டம் ஆகஸ்ட் 9-ம் தேதி நடந்தது. இந்த ஆண்டுக்கான காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்று கூட்டம் ஆகியவை ஒருமுறை கூட நடத்தப்படவில்லை.

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12-ம் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் அதுகுறித்து ஆணையம் இதுவரை எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை (23-ம் தேதி) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின்போது உச்சநீதிமன்றம் வரையறுத்தபடி, தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு வலியுறுத்த உள்ளது.

இதேபோல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 6 மாதங்களுக்குப் பிறகு வரும் 28-ம் தேதி ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுத்தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்