Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு உறுதி ஆகுமா?

மே 28, 2019 05:28

புதுடெல்லி: தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது. 4 மாநிலங்களும் இந்த இரு அமைப்புகளுக்கு தங்களது தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து உள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 2 முறை கூடி இருக்கிறது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி கூடியது. ஒழுங்காற்று குழு கூட்டம் கடைசியாக 23-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதால் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே சமாளிக்க முடியும் என தமிழக அதிகாரிகள் வாதிட்டனர். ஆனால் அதுபற்றி அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள்.

கூட்டத்தில், “காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை தடுக்க வேண்டும், தமிழகத்துக்கு திறந்துவிடப்பட வேண்டிய 9.19 டி.எம்.சி. தண்ணீரை ஜூன் 1-ந் தேதி முதல் திறந்து விட வேண்டும். ஜூலை மாதம் 30 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அதிகாரிகள் வலியுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி ரேவண்ணா தமிழகம் வந்திருந்தபோது, காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிட இயலாது என்றும், அதிக மழை பெய்தால் மட்டுமே திறந்து விட முடியும் என்றும் கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த இருக்கிறது. இதற்கு ஆணையம் என்ன முடிவு எடுக்கப்போகிறது? தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு உறுதி ஆகுமா? என்பது இந்த கூட்டத்தில்தான் தெரியும்.

தலைப்புச்செய்திகள்