Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்காததற்கு உள்நாட்டு அரசியலே காரணம்: பாகிஸ்தான்

மே 29, 2019 05:41

புதுடெல்லி: சமீபத்தில் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பா.ஜ.க. 303 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது.  அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக போட்டியின்றி மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதனை தொடர்ந்து வருகிற 30-ந்தேதி பிரதமராக அவர் பதவியேற்கிறார்.

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமராக மோடி முதல்முறையாக பதவியேற்றபோது பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இந்த முறை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா அழைப்பு விடுக்கவில்லை.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்காதது பற்றி அந்நாட்டு  வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியதாவது, “
மோடியின் ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரமும், பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டுதான் இருந்தது. அதை உடனடியாக சரி செய்யலாம் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்க இந்தியாவின் உள்நாட்டு அரசியல் அனுமதிக்காது. பதவியேற்பு விழாவைக் காட்டிலும், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து இருநாடுகளும் பேசுவது அவசியமாகும். 

பேச்சுவார்த்தைக்கு புதிய வழியை இந்தியா கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். தெற்காசியப் பிராந்தியத்தில் வளர்ச்சி வேண்டும் என மோடி விரும்பினால், பாகிஸ்தானுடன் அமர்ந்து பேசி, பிரச்னைக்கு தீர்வு கண்டறிய வேண்டும். பதற்றத்தை தணிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் நலனும் இதில் அடங்கியுள்ளது” என்றார். 

 

தலைப்புச்செய்திகள்