Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆசிரியர் தகுதித்தேர்வு நிபந்தனைகளை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

மே 31, 2019 06:06

சென்னை: mஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெறுவோரின் தகுதிச்சான்று 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பது உள்ளிட்ட பல நிபந்தனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், கிருஷ்ணகிரியை சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களில் கூறியிருப்பதாவது:-

தகுதித்தேர்வு

கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக்கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் தகுதிச்சான்று ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில், குறிப்பாக 150 மதிப்பெண்களுக்கான தேர்வில் பிரதான பாடத்தில் இருந்து 30 சதவீத கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகிறது. எஞ்சிய கேள்விகள் பொது அறிவு, திறனறிவு தொடர்பாக உள்ளது.

சட்டவிரோதம்

இதனால் பிரதான பாடத்திற்கான கேள்விகளுக்கு சரிவர பதில் அளிக்க முடியாதவர்கள் கூட குறைந்தபட்ச மதிப்பெண்ணான 90-ஐ பெற்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் நிலை உள்ளது. இந்த தேர்வுகளும் சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.

இந்தநிலையில், வரும் ஜூன் 8 மற்றும் 9-ந் தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல தேசிய அளவில் நடத்தப்படும் ‘நெட்’ மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் ‘ஸ்லெட்’ போன்ற தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிரந்தரமாக சான்று வழங்கும்போது, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு மட்டும் 7 ஆண்டுகளை நிர்ணயம் செய்வது என்பது சட்டவிரோதமானது. எனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கும் நிரந்தர சான்றிதழ் அளிக்க தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தள்ளுபடி

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘ஏற்கனவே 1,500 ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுத காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் எப்படி அமைய வேண்டும்? என்பதை அரசும், கேள்வித்தாளை வடிவமைத்த நிபுணர்கள் குழுவும்தான் நிர்ணயம் செய்ய முடியும். விண்ணப்பதாரர்கள் அதை தீர்மானிக்க முடியாது’ என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.சதீஷ்குமார், இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

தலைப்புச்செய்திகள்