Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நோயாளிக்கு பொருத்த ரெயிலில் சென்ற கல்லீரல்

பிப்ரவரி 16, 2019 05:42

மும்பை: மும்பை உல்லஸ் நகரைச் சேர்ந்த 53 வயதான சுகாதார உதவியாளர் ஒருவர் கடந்த 13-ந்தேதி தும்பிவிலியில் நடந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். 
தானேவில் உள்ள ஜுபிட்டர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு நேற்று மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி முன் வந்தார். 

இதையடுத்து சுகாதார உதவியாளர் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டன. இதில் கல்லீரல் பரேலில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரிக்கு ஒதுக்கப்பட்டது.அந்த ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளி ஒருவருக்கு உடனடியாக கல்லீரல் பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் சாலையில் சென்றால் போக்குவரத்து நெரிசல் காரணமாக காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை இருந்தது. 

இதையடுத்து உள்ளூர் மின்சார ரெயிலில் கல்லீரலை கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கு ஆஸ்பத்திரி சார்பில் தகவல் தெரிவித்தனர். அவர்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். உடனே கல்லீரலை ஒரு குளிர்சாதன பெட்டியில் வைத்து ஆம்புலன்சில் தானே ரெயில் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். அங்கிருந்து மின்சார ரெயிலில் 4 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் கல்லீரலை கொண்டு சென்றனர். 38 நிமிடப் பயணம் செய்து பரேலில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று நோயாளிக்கு பொருத்தப்பட்டது.முதல் முறையாக உடல் மாற்று சிகிச்சைக்காக ரெயிலில் உடல் உறுப்பு கொண்டு செல்லப்பட்டது. இதுவே சாலையில் கொண்டு சென்று இருந்தால் 2 மணி நேரம் ஆகி இருக்கும். 

இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறும்போது, “கல்லீரலை எவ்வளவு சீக்கிரம் கொண்டு சென்று சேர்க்க முடியுமா அவ்வளவு நேரத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். இதற்காக உள்ளூர் மின்சார ரெயில் சேவையை தேர்வு செய்தோம். தானே ஆஸ்பத்திரியில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஆம்புலன்ஸ் செல்ல தனிப்பாதை ஏற்படுத்தி கொடுத்தனர். பின்னர் ரெயிலில் கல்லீரல் 38 நிமிடத்தில் கொண்டு வரப்பட்டது” என்றனர்.  
 
 

தலைப்புச்செய்திகள்