Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் மூத்த தலைவர்களை இழுக்க பாஜ மாஸ்டர் பிளான்?

ஜுன் 06, 2019 10:04

பெங்களூரு: மக்களவை தேர்தல் முடிவு வெளியாகிய மறுநாள் சாம்ராஜ்நகர் தொகுதி பாஜ எம்பி சீனிவாசபிரசாத்தை கர்நாடக மாநில மஜத தலைவர் எச்.விஸ்வநாத் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பிற்கு பின் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்களை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

கூட்டணி ஆட்சி நடக்கும்போது, மஜத தலைவர் இப்படி செயல்படுவதற்கு பல தரப்பில் கடும் அதிருப்தி ஏற்படுத்தியது. குருபர் வகுப்பை சேர்ந்த விஷ்வநாத்தை பாஜவுக்கு இழுத்தால் பழைய மைசூரு மாகாண பகுதியில் கட்சிக்கு செல்வாக்கு கிடைக்கும் என்ற யோசனையில் உள்ள பாஜ தலைமை, ரகசிய இழுப்பு நாடகத்தை அரங்கேற்றி வருவதாக தகவல் பரவியது. அதை உறுதி செய்யும் வகையில் கர்நாடக மாநில மஜத தலைவர் பதவியை நேற்று விஷ்வநாத் ராஜினாமா செய்ததின் மூலம் அவர் பாஜ பக்கம் சாய்வாரோ என்ற சந்தேகம் வலு பெற்றுள்ளது. 

அதே சமயத்தில் மக்களவை தேர்தல் முடிந்த சில நாட்களில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.ரோஷன்பெய்க் காங்கிரஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துவருவதுடன், பாஜ தலைவர்களை புகழ்ந்து பேசி வருகிறார். 

கட்சி விரோத செயலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் தலைமை அவருக்கு அனுப்பியுள்ள நோட்டீசுக்கும் இதுவரை பதில் கொடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறார். அவரையும் பாஜ மறைமுகமாக இயக்கி வருவதாகவும், கட்சியில் சேர்த்துக் கொண்டால் சிறுபான்மை வகுப்பினரின் ஆதரவை பெற முடியும் என்ற எண்ணமும் பாஜவுக்கு உள்ளதாக தெரியவருகிறது. 

இந்நிலையில் பாஜவின் குறியில் மூன்றாவது காயாக முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டி இருப்பதாக தெரியவருகிறது. பெங்களூரு மாநகரில் கட்சி வளர்ச்சிக்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்துவரும் அவர், செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கிறார். கூட்டணி ஆட்சியில் அவரை விட ஜூனியர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துவிட்டு, மூத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. 

இவ்வளவு நாட்கள் பொறுமை காத்து வந்த அவர், நேற்று கொதித்தெழுந்து கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இதை பார்க்கும்போது பாஜவின் வலையில் அவரும் விழுந்து விட்டாரோ என்ற நினைக்க தோன்றுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ரெட்டி வகுப்பை சேர்ந்த அவரை பாஜவில் சேர்த்துக் கொண்டால் அவ்வகுப்பினரின் ஆதரவை பெற முடியும் என்ற யோசனையில் பாஜ உள்ளதாக தெரிகிறது. கூட்டணி ஆட்சியில் உள்ள மூன்று முக்கிய தலைவர்களை பாஜவில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சியை பாஜ மேற்கொண்டு வருவதின் மூலம் மாநில அரசியல் பரபரப்பாகியுள்ளது. 

தலைப்புச்செய்திகள்