Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி அழகுமுத்துகோன் குருபூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அழகுமுத்துகோன் யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த சமுதாய மக்கள் மிக விமரிசையாக இவ்விழாவை கொண்டாடுவார்கள். தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2004ம் ஆண்டு அழகுமுத்துகோனின் சிலை அமைந்த மணிமண்டபம் திறக்கப்பட்டது.
அதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி பல்லாயிரக்கணக்கான யாதவர் சமூகத்தினர் அங்கு சென்று குருபூஜை விழாவை கொண்டாடி வருகின்றனர். அரசு விழாவாகவும் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அழகுமுத்துகோன் சிலை சிதிலமடைந்தது. அதுகுறித்து கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்து சிலையை மாற்றித்தர வேண்டும் என்று தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் கோகுலம் அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு அரசுக்கும் தபால் அனுப்பியுள்ளது. ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை.
இதுகுறித்து கோகுலம் அறக்கட்டளையைச் சேர்ந்த மூர்த்தி கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ம் தேதி அழகு முத்துகோன் குருபூஜை தமிழக அரசால் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் மட்டும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் வருவார்கள். அவ்வளவுதான். அதன்பிறகு அவர்கள் யாருமே அழகு முத்துகோன் சிலை பற்றி எந்தவொரு விஷயத்தையும் நினைக்க மாட்டார்கள்.
முதல்வரின் தனிப்பிரிவிலும் இதுகுறித்து மனுக் கொடுத்துள்ளோம். அடுத்த மாதம் வழக்கம்போல அழகுமுத்துகோன் குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட இப்போதிலிருந்தே தயாராகி வருகிறோம். இந்த வருடமாவது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து தகுந்த விசாரணை மேற்கொண்டு சிதிலமடைந்து இருக்கும் அழகு முத்துகோன் சிலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதை தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என கூறினார்.