Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்: சீமான் கோரிக்கை

ஜுன் 07, 2019 01:52

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் இந்திய ஆயுதச் சட்டத்தில் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின்பும், மராட்டிய மாநில அரசே விடுதலை செய்திருக்கிற தகவலானது தம்பி பேரறிவாளன் தொடுத்தத் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிய வந்திருப்பது ஏழு தமிழர்களை விடுதலை செய்யத் தமிழக அரசுக்குத் தடையேதுமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

250-க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு ஆறாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர், அது 5 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தால் குறைக்கப்பட்டது. தண்டனைக்காலம் முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்பாகவே மராத்திய மாநில அரசால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

7 பேர் விடுதலைக்காக 161-வது சட்டப்பிரிவின்படி, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஏறக்குறைய ஒரு வருடத்தைக் கடக்கவிருக்கிற நிலையில் இன்னும் அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் தராது மவுனம் சாதிக்கிறார் தமிழக ஆளுநர். இது அப்பட்டமான விதிமீறல். மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்ற ஓர் அரசின் முடிவை, மக்களால் தேர்வுசெய்யப்படாத ஆளுநர் தடுத்து வைத்திருக்கிறார் என்றால், இது மக்களாட்சித் தத்துவத்திற்கே மாபெரும் பாதகத்தையும், களங்கத்தையும் ஏற்படுத்துவதாகும்.

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி? ஏழு தமிழர்க்கு ஒரு நீதி? என பாகுபாடு காட்டுவது தனிமனித வஞ்சம் தீர்க்கச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகார அத்துமீறல்.அதனை ஜனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட, நீதியின்பால் நம்பிக்கை கொண்ட எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, சஞ்சய் தத் வழக்கில் மத்திய அரசு விடுதலையை நிராகரித்த போதும் மாநில அரசே தண்டனைக்கழிவு வழங்கி விடுதலையைத் தந்த நடைமுறையை அடியொற்றி, தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனைக்கழிவு வழங்கி ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்