Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு

ஜுன் 14, 2019 06:15

சென்னை: சென்னையில் உள்ள ஓட்டல்களில் தண்ணீர் பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிக விலை கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓட்டல்களுக்கு தண்ணீர் தேவை அதிகம் இருப்பதால் அதனை சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். காலை, மாலையில் வழங்கப்படும் டிபன்களுக்கு தேவைப்படும் தண்ணீரை விட மதிய சாப்பாட்டிற்கு தான் அதிகளவு தேவைப்படுகிறது என்கிறார்கள்.

தேவையான அளவு தண்ணீர் கிடைக்காததால் பிரச்சினை தீரும் வரை மதிய சாப்பாட்டு விற்பனையை நிறுத்தலாமா என்று ஆலோசித்து வருகிறோம் என்று சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் ரவி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- இட்லி, தோசை, பூரி டிபன் வகைகள் தயாரிக்க தண்ணீர் அதிகளவு பயன்படாது. மதியம் சாப்பாட்டிற்கு தேவையான அரிசி முதல் சாம்பார், ரசம், மோர் இவை அனைத்திற்கும் தண்ணீர் அதிகளவு தேவை.

மேலும் கூட்டு, பொரியல் என 10-க்கும் மேற்பட்ட சிறு சிறு பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை கழுவதற்கு தண்ணீர் அதிகளவு செலவாகும். 12 ஆயிரம் லிட்டர் டேங்கர் தண்ணீர் தொடக்கத்தில் ரூ.1800-க்கு கொடுத்தனர். பின்னர் ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டது. இப்போது தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் ரூ.5000 வரை கேட்கிறார்கள். இந்த விலையிலும் தண்ணீர் கிடைக்காததால் ஓட்டல் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

சாப்பாடு விலையை விட தண்ணீருக்கு செலவழிக்கின்ற தொகை அதிகமாக இருப்பதால் தண்ணீர் பிரச்சினை இன்னும் அதிகமானால் மதிய சாப்பாடு விற்பனையை நிறுத்துவது தவிர வேறு வழியில்லை. மதிய சாப்பாட்டை நிறுத்தினால் பெருமளவு தண்ணீர் செலவு குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதே நேரத்தில் வெளியூர்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வரும் பயணிகளுக்கு மதிய உணவுக்காக மாற்று ஏற்பாடு தான் செய்ய வேண்டும். தொடர்ந்து தண்ணீர் பிரச்சினை அதிகரித்தால் இந்த முடிவை தான் ஓட்டல் உரிமையாளர்கள் எடுக்க வேண்டியது வரும்இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்