![](admin/uploads/.5c9b2a21d61944.32617783.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் கைவரிசை காட்டிவந்த வடமாநில கொள்ளையர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை நொளம்பூர், எஸ்பி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (32). இவர், கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வேலூரியில் உள்ள தங்க கோயிலுக்கு சென்றார். அங்கிருந்து 2 நாட்களுக்கு முன் சென்னைக்கு திரும்பினார். அப்போது அவரது வீட்டு கதவின் பூட்டை உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 25 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் தொழில் அதிபர் சிவகுமார் (35). இவர் சில நாட்களுக்கு முன் தனது வீட்டின் அருகே உள்ள தங்கை வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்படி நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அண்ணாநகர் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், நொளம்பூர் பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருவேற்காடு பகுதியில் பதுங்கியிருப்பதாக துணை ஆணையருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த 2 பேரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். இதில் இருவரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராக்கேஷ் (26), ரிச்சு (45) எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் நொளம்பூர் பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து, கொள்ளையடித்த நகைகளை எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.