Saturday, 5th October 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சாரதாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் அரசு மருத்துவமனைக்கு பதிலாக தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியில் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அலோபதி வைத்தியம் மட்டுமல்லாமல் சித்தா, ஆயுர்வேதம், இயற்கை வைத்தியம், ஹோமியோபதி என அனைத்து வகையான சிகிச்சை முறைகளும் இங்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நவீன உபகரணங்கள் உள்பட பல்வேறு உபகரண வசதிகளும் திருச்சி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளது.
இந்த மருத்துவமனையில் தான் திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், நாமக்கல் என சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் நோயாளிகள் தினமும் சிகிச்சை பெறுகிறார்கள். இத்தகைய சிறப்பு பெற்ற திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் ஆக இருப்பவர் டாக்டர் சாரதா. இவர் நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை பணியில் இருந்த டாக்டர்கள் சோதித்தனர். இதைத்தொடர்ந்து டீன் சாரதா உடனடியாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தன்னை உள்நோயாளியாக அனுமதிக்கும்படி கூறினாராம். அதன்படி அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனையை நம்பாமல், அந்த அரசு மருத்துவமனை டீனே தனியார் மருத்துவனையில் சிசிச்சை பெற்றதை பலரும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.