Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூத்துக்குடி- புதுமண தம்பதி வெட்டிக் கொலை : சதிராடும் சாதி ஆணவம்

ஜுலை 04, 2019 10:11

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே இன்று அதிகாலை வீட்டின் வெளியில் தூங்கிய புதுமண தம்பதி கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த கும்பல் தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பெரியார் நகர் காலனியைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவர்களது மகன் சோலைராஜா (23). மகள் சோலைரதி (19). சோலைராஜா குளத்தூர் அருகே உள்ள கல்லூரணி தனியார் உப்பளத்தில் வேலை பார்த்து வந்தார். சோலைரதி, கோவில்பட்டியில் உள்ள மில்லில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சோலைராஜா வேலை பார்த்த உப்பளத்தில் குளத்தூர் அருகே உள்ள பல்லாக்குளத்தைச்சேர்ந்த அழகர் மகள் பேச்சியம்மாள் என்ற ஜோதி (20) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் நாளடைவில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரிய வரவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல்ஜோடி, நண்பர்கள் உதவியுடன் 3 மாதத்திற்கு முன் குளத்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

போலீசார் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இருவரும் மேஜர் என்பதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் இந்த திருமணத்தில் ஜோதியின் பெற்றோருக்கு விருப்பம் இல்லையெனத் தெரிகிறது. அதன்பிறகு காதல் ஜோடி இருவரும் பெரியார் நகர் காலனியில் முத்துமாரியுடன் வசித்து வந்தனர். நேற்றிரவு முத்துமாரி, மகன் சோலைராஜா, மருமகள் ஜோதி ஆகிய 3 பேரும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அதன்பிறகு முத்துமாரி வீட்டிற்குள்ளும், மகன், மருமகள் ஆகியோர் காற்றுக்காக வீட்டின் வெளியில் முற்றத்திலும் பாய் விரித்து படுத்து தூங்கினர். இன்று அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த 5க்கும் மேற்பட்ட கும்பல், வீட்டின் வெளியில் படுத்திருந்த சோலைராஜா, ஜோதி ஆகியோரை சரமாரியாக வெட்டினர். கழுத்து, கை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். 2 பேரின் கழுத்திலும் ஆழமான வெட்டு விழுந்ததால் இருவரின் தலையும் தொங்கியது. மேலும் ஜோதியின் கை மணிக்கட்டும் துண்டானது. அதன்பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.

இன்று காலை 6 மணியளவில் வீட்டின் வெளியில் வந்த முத்துமாரி, மகன், மருமகள் கொலை செய்யப்பட்டு கிடப்பது கண்டு கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம்,பக்கத்தினர் திரண்டு வந்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் கொலையாளிகளை கைது செய்யும் வரை உடல்களை எடுக்க விடமாட்டோம் என்று சோலைராஜாவின் உறவினர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதியளித்தனர். அதன்பிறகு இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக குளத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. புதுமண தம்பதி கொலை தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் ஜோடி திருமணத்தில் ஜோதியின் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லையெனத் தெரிகிறது. இதனால் இந்த இரட்டைக் கொலையை அவர்கள் தான் செய்திருக்க வேண்டும். இது ஆணவ படுகொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்