Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாப்கின் செய்வது எப்படி - கோவை வந்து கற்றுக்கொண்ட பிராவோ

ஜுலை 04, 2019 11:27


கோயம்புத்தூர்: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் பிராவோ நேற்று தமிழகம் வந்து 'பேட்மேன்' அருணாச்சலம் முருகானந்தத்தை சந்தித்துவிட்டு சென்றார். கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் தற்போது உலகம் முழுக்க பிரபலம். காரணம் அவரை பற்றி அக்சய் குமார் நடிப்பில் வெளியே வந்த பேட்மேன் திரைப்படம். முருகானந்தம் தனது வாழ்க்கையில் பல இன்னல்கள், அவமானங்களுக்கு இடையில் எப்படி சானிட்டரி நாப்கின்களை உருவாக்கினார் என்ற நிஜ சம்பவத்தின் கதைதான் இந்த படம். பல ஆயிரம் பெண்களை சந்தித்து, பல கட்ட சோதனைகள், அவமானங்களுக்கு பின் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை உருவாக்கும் எந்திரத்தை வடிவமைத்தார். 

 இவரின் இந்த எந்திரம் தற்போது இந்தியாவில் 25 மாநிலங்களில் பயன்பாட்டில் இருக்கிறது. இவருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. அதெல்லாம் போக இவரை பற்றி வெளியான டாக்குமெண்டரி படமான ''பீரியட் எண்ட் ஆப் தி செண்டன்ஸ்'' திரைப்படம் ஆஸ்கார் விருதும் 2018ல் வாங்கியது. இந்த நிலையில் கடந்த ஐபிஎல் போட்டியின் போது அருணாச்சலம் முருகானந்தம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ விவரங்களை கேள்விப்பட்டுள்ளார். அப்போதே அருணாச்சலம் முருகானந்தத்தை பிராவோ சந்திக்க திட்டமிட்டார். இந்த நிலையில் நேற்று பிராவோ தமிழகம் வந்து அருணாச்சலம் முருகானந்தம் உடன் சந்திப்பு நடத்தினார்.

 மேற்கு இந்திய தீவுகளில் இருந்து பிராவோ நேரடியாக கோவையில் இருக்கும் கேஎன்ஜி புதூருக்கு வந்தார். இவர்கள் நேற்று நாள் முழுக்க உரையாடினார்கள். அருணாச்சலம் முருகானந்தம் பிராவோவிடம் தன்னுடைய எந்திரம் எப்படி வேலை செய்யும் என்று காட்டினார். அவர் கடந்து வந்த பாதைகளை குறித்து விவரித்தார். பிராவோவோ, தன்னுடைய நாட்டில் நிறைய பெண்கள் நாப்கின் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் உதவ வேண்டும். அவர்களுக்கு உங்கள் மூலம் உதவ நினைக்கிறேன். இந்த எந்திரங்கள் எனக்கு பிடித்து இருக்கிறது. இதை போல எனக்கு ஒரு எந்திரம் செய்து கொடுக்க முடியுமா என்று அருணாச்சலம் முருகானந்தமிடம் கேட்டுள்ளார். இதில் மகிழ்ச்சி அடைந்த அருணாச்சலம் முருகானந்தம் பிராவோவிற்கு எந்திரங்களை செய்து அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார். அதன்படி அருணாச்சலம் முருகானந்தம் ஒரே ஒரு எந்திரத்தை இலவசமாக செய்து பிராவோவிடம் கொடுக்க உள்ளார். அதை தன்னுடைய செலவில் மேற்கு இந்திய தீவுகள் கொண்டு செல்லும் பிராவோ, பின் அங்கு நிறைய எந்திரங்களை உருவாக்க போகிறார். இன்னும் 10 நாளில் பிராவோவிற்கு இந்த எந்திரத்தை செய்து அனுப்ப இருக்கிறார் அருணாச்சலம் முருகானந்தம்.

தலைப்புச்செய்திகள்