Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இயர்போனுடன் டூவீலர் ஓட்டினால் அபராதம்... எவ்வளவு தெரியுமா?

ஜுலை 04, 2019 11:55

பெங்களூர் : டூவீலர்களில் பயணம் செய்யும்போது இயர்போன் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இந்திய சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது அதிகபட்ச கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் அனைத்து போக்குவரத்து விதிமுறைகளும் மிக சரியாக கடைபிடித்தாலும் கூட, கூடுதல் கவனத்துடன் இருக்காவிட்டால், விபத்தில் சிக்கி கொள்வதற்கான அபாயம் உள்ளது. ஏனெனில் இங்கு மற்ற வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பார்கள் என கூற முடியாது. வாகனங்களை இயக்கும்போது லேன் மாறுவதற்கு என விதிமுறைகள் (Lane Rules) உள்ளன. ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இங்கு அதனை கடைபிடிப்பது கிடையாது. அப்படி ஒன்று இருப்பதே பலருக்கும் தெரியாது என்றும் கூட சொல்லலாம்.

 எனவே திடீர் திடீரென லேன் மாறி மற்ற வாகன ஓட்டிகளுக்கும் சிலர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை இரு சக்கர வாகன ஓட்டிகள் பலருக்கும் இயர்போன்கள் (Earphones) மூலமாக பாடல்களை ரசித்து கேட்டு கொண்டே பயணிக்கும் வழக்கம் உள்ளது. பாடல்கள் கேட்பதற்கு மட்டுமின்றி, வாகனம் ஓட்டி கொண்டிருக்கும்போது செல்போனில் பேசவும் பலர் இயர்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இது மிகவும் அபாயகரமானது. இதன் காரணமாக சுற்றுப்புறத்தில் எழும் சப்தங்கள் உங்களுக்கு கேட்காமல் போய் விடலாம். குறிப்பாக மற்ற வாகன ஓட்டிகள் ஹாரனை ஒலித்தால், அது உங்களுக்கு கேட்காமல் போய் விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது மற்ற வாகன ஓட்டிகளுடன் உங்களுக்கு வீண் தகராறையும் ஏற்படுத்தி விடும்.

  ஓட்டும்போது நீங்கள் இசை மழையில் நனைந்து கொண்டிருந்தால், உங்கள் கவனம் திசை திரும்பி விபத்து நேர்வதற்கான அபாயமும் உள்ளது. இந்த சூழலில் இயர்போன்களில் பாடல்களை கேட்டு கொண்டு இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இதன்படி இயர்போன்கள் மூலமாக பேசி கொண்டோ அல்லது பாடல்களை கேட்டு கொண்டோ இரு சக்கர வாகனங்களை இயக்குபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக மாநிலம் பெங்களூர் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதற்கென புதிய அறிவிப்பு ஒன்றை பெங்களூர் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

  பெங்களூர் போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், ''இயர்போன்கள் வாகன ஓட்டிகளின் காதுகளை அடைத்து விடும். இதனால் விபத்து நேர்வதற்கான அபாயம் உள்ளது. வாகனம் ஓட்டும்போது இயர்போன் மூலமாக பேசுவது, பாடல்கள் கேட்பது என இரண்டுமே விதிமீறல்தான்'' என்றார். போலீசார் கண்காணித்து கொண்டிருக்கையில் மட்டும் இயர்போன்கள் இல்லாமல் இருந்தால் போதும் என நினைத்து விட வேண்டாம். போலீசார் இல்லாவிட்டாலும் கூட அந்தந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வாகன ஓட்டிகளை கண்காணிக்கும். இதன் மூலமாக வாகனம் ஓட்டும்போது இயர்போன்களை பயன்படுத்துபவர்களை கண்டறிய போலீசார் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் இதனை மீறுபவர்களுக்கு இ-சலான் அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஆனால் பெங்களூர் போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி மஹாராஷ்டிரா மாநிலம் புனே போக்குவரத்து போலீசாரும், இயர்போன்களை பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இயர்போன் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்களில் வருபவர்களை நிறுத்தும் புனே போக்குவரத்து போலீசார், இயர்போன்களை வாங்கி தங்கள் காதில் வைத்து, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டி பாடல்களை கேட்கிறாரா? என பரிசோதித்து பார்க்கின்றனர். ஆனால் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எதையும் அவர்கள் விதிப்பதில்லை. இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் புனே போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது செல்போன், இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகே அங்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளன.

 இதனிடையே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை புனே போலீசார் சமீபத்தில் அமலுக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்கு இரு சக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நகர சாலைகளில் வேகமாக செல்லப்போவதில்லை. எனவே ஹெல்மெட் தேவையில்லை என அவர்கள் வாதிட்டனர். இது தொடர்பாக மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை புனே எம்எல்ஏக்கள் சந்தித்து பேசினர். இதன்பின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் நகர சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ய இரு சக்கர வாகன ஓட்டிகளை புனே போக்குவரத்து போலீசார் அனுமதித்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. முன்னதாக இயர்போன்களை பயன்படுத்தி கொண்டு இரு சக்கர வாகனங்களை இயக்குபவர்களுக்கு எதிராக கொல்கத்தா போக்குவரத்து போலீசாரும் கடந்த ஆண்டு நடவடிக்கை எடுக்க தொடங்கினர் என்பது கவனிக்கத்தக்கது. ஹெல்மெட்டிற்கு உள்ளாக இயர்போன்களை பயன்படுத்தியதால் பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்