Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தேனி: பண மோசடியானது அனைத்து இடங்களிலும் நடைபெற்று வரும் நிலையில் தற்போது செல்போன் கோபுரம் அமைக்க இடம் வழங்கினால் அதிக வாடகை தருவதாக கூறி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இளைஞர் ஒருவரிடம் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரை செல்போனில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர் பிரபல செல்போன் சேவை நிறுவனம் சார்பில் பேசுவதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து சதீஷிற்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க இருப்பதாகவும், அதற்காக 80 லட்சம் ரூபாய் முன்பணம் தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதை தொடர்ந்து மாதம் 45 ஆயிரம் ரூபாய் வாடகை தருவதாகவும் அந்த மர்ம நபர் ஆசை காட்டியுள்ளார்.
இதனையடுத்து இதற்காக வாடகை பத்திரம் பதிவு செய்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என மோசடி நபர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அந்த மோசடி நபர்கள் பேச்சை நம்பிய சதீஷ் அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் 1 லட்சத்து 93 ஆயிரத்தை ஆறு தவணைகளாக செலுத்தியுள்ளார். பணத்தை கொடுத்த பின்னர் அந்த மோசடி நபரின் செல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டு விட்டதால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் முதற்கட்டமாக டெல்லியை சேர்ந்த பாபு என்பவர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது.