Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பெங்களூரு: பெங்களூருவில் மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாக கூறி ரூ.1.5 கோடி லஞ்சம் வாங்கியதாக துணை கமிஷனரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எம்.ஏ. ஜூவல்ஸ் நிறுவனத்தின் நிதி திட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு முதிர்வு காலத்தில் பணத்தை திருப்பித் தரவில்லை. இதுதொடர்பாக நிறுவனத்தின் மீதும், நிர்வாக இயக்குனர் முகமது மன்சூர் கான் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரித்து வருகிறது. இந்நிறுவனங்கள் முதலீடு செய்து ஏமாந்த 26 ஆயிரம் பேரிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் ஐ.எம்.ஏ. அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை சிறப்பு புலனாய்வு பிரிவு கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இருந்து முகமது மன்சூர்கானை தப்பிக்க வைக்க உதவுவதாக கூறி பெங்களூர் நகர துணை கமிஷனர் விஜய்சங்கர் ரூ.1.5 கோடி லஞ்சம் வாங்கியதாக சிறப்பு புலனாய்வு விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று கைது செய்தனர். விஜய்சங்கர் ஐ.எம்.ஏ. நிறுவனம் தொடர்பாக கர்நாடக அரசிடம் சாதகமான அறிக்கை கொடுப்பதாக கூறி லஞ்ச பணத்தை வாங்கி உள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்த உள்ளனர். மேலும், விஜய்சங்கரை போலீசார் காவலில் வைத்து விசாரிக்க உள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.