Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கரூர்: கரூர் அருகே சகோதரியிடம் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட அண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி கவுண்டனூரை சேர்ந்தவர் நாமதேவ் ( வயது 38). இவர் கரூர் மாவட்டம் வெங்கமேடு நாவல்நகர் பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டில் தங்கியிருந்து , கியாஸ் அடுப்பு பழுது பார்க்கும் வேலையும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கமேடு காமராஜர் நகரை சேர்ந்த வாலிபர்கள் மனோஜ்குமார், ஸ்ரீதர் ஆகியோர் நாவல் நகர் பகுதிக்கு வந்து, அங்கு தங்கியிருந்த வெளி மாநில தொழிலாளர்களிடம் தகராறு செய்தனர். இதையடுத்து அவர்களை நாமதேவின் சகோதரி தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மனோஜ்குமாரும், ஸ்ரீதரும் தகாத வார்த்தைகளால் நாமதேவின் சகோதரியை திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இதையடுத்து நேற்றிரவு மீண்டும் மனோஜ்குமாரும், ஸ்ரீதரும் நாவல்நகருக்கு வந்தனர். அப்போது நாமதேவ் அவர்களிடம் சென்று ஏன் எனது சகோதரியை திட்டினீர்கள் என்று தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து கத்தியால் நாமதேவை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த நாமதேவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே நாமதேவ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மனோஜ்குமார், ஸ்ரீதர் ஆகியோரை தேடி வருகின்றனர்.