Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட ஏசி சண்முகம் மனு தாக்கல்

ஜுலை 11, 2019 07:08

வேலூர்: வேலூர் பாராளுமன்ற தேர்தல் ஆகஸ்டு 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. மனுத்தாக்கல் செய்ய 18-ந்தேதி கடைசி நாளாகும். 19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 22-ந்தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

வேட்பு மனுக்களை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்யும் வேட்பாளர் வைப்புத் தொகை ரூ.25 ஆயிரம் பணமாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும்.

வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. கலெக்டர் அலுவலகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி. வேட்பு மனுத்தாக்கல் செய்யவரும் வேட்பாளர்களுடன் 3 கார்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படும்.

மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கியதையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் 3 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள 3 இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அரசியல் கட்சி பிரமுகர்களிடம் எதற்காக செல்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து அனுப்பினர்.

அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இன்று காலை 11.40 மணியளவில் வேட்பு மனுதாக்கல் செய்தார். அமைச்சர் கே.சி.வீரமணி, பா.ம.க., தே.மு.தி.க., த.மாகா. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் வந்திருந்தனர். வேட்பு மனுதாக்கல் செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்களை கேமராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்