Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏ திடீர் ராஜினாமா

ஜனவரி 16, 2019 08:30

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஜெய்டோ சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ மாஸ்டர் பல்தேவ் சிங். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இவர், கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் எம்எல்ஏ பல்தேவ் சிங், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இது தொடர்பாக கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். 

அதில், கட்சி தலைமை தனது அடிப்படை சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை முற்றிலும் விட்டுக்கொடுத்துவிட்டதால் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். மேலும், பஞ்சாப் நதி நீர் பிரச்சனையில் கெஜ்ரிவால் இரட்டை நிலைப்பாடு கொண்டிருப்பதாகவும், அவர் தலித் மக்களுக்கு விரோதமானவர் என்றும் குற்றம்சாட்டினார். 

மேலும், கெஜ்ரிவாலின் சர்வாதிகார நடவடிக்கைகளால் தேசிய மற்றும் மாநில அளவிலான தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியதாகவும் பல்தேவ் சிங் குறிப்பிட்டுள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தில், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சுக்பால் சிங் கைரா, சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்புச்செய்திகள்