Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்தநாள் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பனங்காட்டுப்படை கட்சி ஒருங்கிணைப்பாளர் அ.ஹரிநாடார் கலந்துகொண்டு காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இதில் அ.ஹரிநாடார் பேசுகையில், “தனக்கென வாழாது நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அனைத்து மக்களும் கல்வி பயிலவேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை தொடங்கி கல்வி கடவுளாக விளங்குகிறார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு காமராஜரின் பிறந்த தினமான ஜூலை 15ல் கல்வி வளர்ச்சி நாளாக இந்தியா முழுவதும் கொண்டாட அரசாணை அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் முதன்முதலில் இலவச மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்த மகத்தான தலைவர் காமராஜர். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை இந்தியாவெங்கும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும். காமராஜர் கட்டிய அணைகளை தவிர வேறு அணைகள் கட்டப்படவில்லை. தண்ணீர் பஞ்சத்தை போக்க அணைகளை தூர்வாரி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. இவ்வாறு பேசினார்.
இதில் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், சென்னை நாடார் நலச்சங்க செயலாளர் விஜயகுமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், மார்க்கெட் ராஜா, சக்தி கணேசன், சதீஷ்குமார், லாரன்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.