Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கந்துவட்டி தகராறில் சென்னை பெண் கொலை- 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது

ஜுலை 18, 2019 08:06

சென்னை: சென்னை ஐஸ்அவுஸ் பேகம் சாகிப் 4-வது தெருவில் வசித்து வருபவர் இருதயநாதன். அதே பகுதியில் உள்ள அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அல்போன்சா மேரி. தனது வீட்டு முன்பு இட்லி வியாபாரம் செய்து வந்தார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. அல்போன்சா மேரி கடந்த 15-ந்தேதி தனது வீட்டில் இருந்து கடற்கரைக்கு சென்று மீன் வாங்கி வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் அவரை காணவில்லை. மாயமான அல்போன்சா மேரி எங்கு சென்றார் என்பது தெரியாமல் இருந்தது. மனைவி காணாமல் போனது பற்றி இருதயநாதன் ஐஸ்அவுஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்போன்சா மேரியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மதுராந்தகம் அருகே உள்ள கிளாவட்டம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிஉள்ள பாழடைந்த கிணற்றில் நேற்று மாலை சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி கிராம மக்கள் மதுராந்தகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், தீயணைப்பு படையினருடன் விரைந்து சென்று சாக்குமூட்டையை கிணற்றில் இருந்து தூக்கினர்.
மூட்டையில் அழுகிய நிலையில் பெண் பிணம் இருந்தது. அவர் யார் என்பது தெரியாமல் இருந்தது. மதுராந்தகம் போலீசார் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரித்தனர். அப்போது ஐஸ்அவுஸ் பகுதியில் இருந்து அல்போன்சா மேரி காணாமல் போனது தெரிந்தது. உடனடியாக ஐஸ்அவுஸ் போலீசார் மதுராந்தகத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண் காணாமல் போன அல்போன்சாமேரி என்பது உறுதியானது.

இட்லி மாவு வியாபாரம் செய்து வந்த அல்போன்சா மேரி தினசரி வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்துள்ளார். அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கிய 2 பெண்களே பணத்தகராறில் இந்த கொலையை செய்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. ராயப்பேட்டை வி.எம். 2-வது தெருவில் வசித்து வரும் வள்ளி, மணிகண்டன் ஆகியோருக்கு அல்போன்சா மேரி வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். வள்ளி ரூ.20 ஆயிரமும், மணிகண்டன் ரூ.60 ஆயிரமும் வாங்கி இருந்தனர். இந்த பணத்தை அவர்களால் திருப்பி கொடுக்க முடியவில்லை.

இந்த பணத்தை அல்போன்சா மேரி கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டனும், வள்ளியும் சேர்ந்து அல்போன்சா மேரியை கொலை செய்ய திட்டமிட்டனர். கடந்த 15-ந் தேதி அன்று மதியம் 12 மணி அளவில் வள்ளி அல்போன்சாவுக்கு போன் செய்தார். அப்போது நீங்கள் கொடுத்த பணத்தை வீட்டுக்கு வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார். இதனை நம்பி வள்ளியின் வீட்டுக்கு அல்போன்சா சென்று பணத்தை கேட்டார்.

அல்போன்சாவிடம் பணம் வாங்கிய மணிகண்டன், வள்ளி வசித்து வரும் வீட்டின் மாடியிலேயே இருக்கிறார். அவரிடமும் அல்போன்சா பணத்தை திருப்பி கேட்டு இருக்கிறார். மணிகண்டனின் வீட்டில் வைத்து பணத்தை கேட்டபோது திடீரென அல்போன்சாவை இரும்பு கம்பியால் தாக்கியாக தெரிகிறது. இதில் நிலை குலைந்து அவர் கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்த வள்ளி அல்போன்சாவின் கைகளை பிடித்துக் கொள்ள மணிகண்டனின் மனைவி தேவி கால்களை இறுக்க பிடித்துள்ளார். இந்த நேரத்தில் மணிகண்டன் தலையணையால் அல்போன்சாவின் முகத்தில் அமுக்கினார். 3 பேரும் சேர்ந்து கொடூரமாக துடிக்க துடிக்க அல்போன்சாவை கொலை செய்துள்ளனர்.

பின்னர் என்ன செய்வது என்று தவித்த மணிகண்டன் இதுபற்றி தனது நண்பர் சுரேசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் மணிகண்டனின் வீட்டுக்கு வந்தார். 4 பேரும் சேர்ந்து அல்போன்சா மேரியின் உடலை மூட்டை கட்டி வெளியில் கொண்டு போட்டு விட திட்டமிட்டனர்.
இதன்படி சுரேஷ், ராயப்பேட்டை முத்தையா தோட்டம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறி அவரது ஆட்டோவை வாங்கினார்.மாலை 3.30 மணி அளவில் அல்போன்சா மேரியின் உடலை சாக்குமூட்டையில் கட்டி ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றனர்.

மதுராந்தகத்தை நோக்கி ஆட்டோவை ஓட்டி சென்ற அவர்கள் கிளாவட்டம் கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த கிணற்றில் அல்போன்சாவின் உடல் இருந்த மூட்டையை வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல சென்னைக்கு வந்து விட்டனர். மூட்டையில் இருந்த அல்போன்சாவின் உடல் அழுகி துர்நாற்றம் வீசியதாலேயே அவர் கொலை செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அல்போன்சா மேரி கொலை செய்யப்பட்டதும் 2 பெண்களே இந்த கொடூர கொலையில் ஈடுபட்டு இருப்பதும் ராயப்பேட்டை மற்றும் ஐஸ்அவுஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்