Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பார் உரிமையாளர் தற்கொலை தொடர்பாக போலீஸ், டாஸ்மாக் அதிகாரிகள் 10 பேர் மீது வழக்கு

ஜுலை 21, 2019 08:29

சென்னை: கடந்த மே மாதம் 28-ந்தேதி மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் திருப்போரூரை சேர்ந்த பார் உரிமையாளர் நெல்லையப்பன்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றி பரபரப்பான வீடியோ ஒன்றையும் இறப்பதற்கு முன்பு வெளியிட்டு இருந்தார். அதில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் பெயரை குறிப்பிட்டு பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக டி.எஸ்.பியாக இருந்த சுப்புராஜிடம் நெல்லையப்பன் புகார் அளித்திருந்தார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினாலேயே தற்கொலை செய்வதாக கூறி இருந்தார். இந்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லையப்பன் தற்கொலை செய்து கொண்ட தன் பின்னணியில் அவரை மிரட்டி போலீசாரும் பணம் வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2 மாதங்களாக ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, காஞ்சிபுரத்தில் 20 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. போலீஸ் அதிகாரிகள், டாஸ்மாக், கலால் துறை அதிகாரிகள் 10 பேரின் வீடுகளில் நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பார் உரிமையாளர் நெல்லையப்பன் மாமல்லபுரம், திருப்போரூர் பகுதிகளில் சுமார் 7 பார்களை நடத்தி வந்தார். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களில் முறைகேடாக மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. இதனை சுட்டிக் காட்டிய போலீசார் நெல்லையப்பனிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு பணத்தை மாமுலாக தர வேண்டும் என்று கேட்டு லஞ்சம் வாங்கியுள்ளனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க் கள் உள்பட 7 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ள இந்த அதிகாரிகள் தங்களது கடமையை மீறி முறைகேடாக செயல்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பார் நடத்துவதற்கு பார் உரிமையாளர்களிடம் இருந்து மாதந்தோறும் லஞ்சம் பெற்றதன் மூலம் முறையாக அரசுக்கு செல்ல வேண்டிய வருவாயில் இழப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 7 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 3 அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார், 10 அதிகாரிகள் மீதும் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 10 பேரிடமும் விசாரணை நடத்தி அது தொடர்பான வாக்குமூலத்தையும் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்