Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பார் உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய புகார் 7 போலீஸ் அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு

ஜுலை 22, 2019 03:53

சென்னை: காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை சேர்ந்த டாஸ்மாக் பார் உரிமையாளர் நெல்லையப்பன் கடந்த மே மாதம் மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளியிட்டு இருந்தார்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நெல்லையப்பன் உள்பட பல்வேறு பார் உரிமையாளர்களிடம் போலீஸ் அதிகாரிகளும், டாஸ்மாக் அதிகாரிகளும் லஞ்ச பணவசூல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.

பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் 7 போலீஸ் அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இவர்கள் 10 பேர் மீதும் கூட்டுசதி, நம்பிக்கை மோசடி மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பார்கள் நடத்துவதற்கு அனுமதித்ததோடு, குறிப்பிட்ட பார் உரிமையாளர்களிடம் இருந்து மாதந்தோறும் பெரிய அளவில் லஞ்சம் பெற்றுள்ளனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், இன்ஸ்பெக்டர் கண்ணன், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட பார் உரிமையாளர் நெல்லையப்பனிடம் பெரிய அளவில் மிரட்டி லஞ்சதொகை பெற்றுள்ளனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து தரும்படியும், அதற்கான முன்பணத்தை செலுத்தும்படியும், மாத வாடகையையும் கொடுக்கும்படி, தற்கொலை செய்துகொண்ட நெல்லையப்பனிடம் வற்புறுத்தி உள்ளார்.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 10 அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ரொக்கப்பணம், தங்க நகைகள் மற்றும் முக்கியமான ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், விசாரணையின் முடிவில் மேற்கண்ட 10 அதிகாரிகள் மீதும் இலாகாப்பூர்வ நடவடிக்கை எடுக்க அரசுக்கு சிபாரிசு செய்யப்படும் என்றும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்