Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, வாழவந்தி நாடு ஊர்புறம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை (15) கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அப்போது மாணவி சத்தம் போடவே, கழுத்தை நெரித்து கொலை செய்யவும் முயன்றார். இதில் அந்த சிறுமியின் உடல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர், தங்களது மகளை செம்மேடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
நேற்று அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தார். மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோர் ஏற்கனவே வாழந்திநாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டம் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து பரமத்திவேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த நிலையில் மாணவி இறந்துள்ளதால், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.